டெல்லி: மாதந்தோறும் தவறாமல் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்தால் மட்டுமே உள்ளீட்டு வரிப் பயன்பாடை பெறமுடியும் என்றும் இல்லாவிட்டால் அதன் பயனை அனுபவிக்க உரிமை கிடையாது என்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளீட்டு வரிபயனை மட்டுமே அனுபவித்துக் கொண்டு மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்யாமல் ஏமாற்றிக்கொண்டு திரிபவர்கள் இனிமேல் தப்பிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்வது நல்லது என்று வரி ஆலோசகர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஜிஎஸ்டி வரிமுறை
வாட் வரி, சிஎஸ்டி வரி என ஒன்றுக்கு மேற்பட்டு 17 பிரிவுகளாக இருந்த மறைமுக வரிகளால் மத்திய அரசுக்கு வரவேண்டிய அனைத்து வரிகளும் முறைகேடாக கருப்பு பண முதலைகளின் கைகளில் போய் தஞ்சமடைவதை தடுக்கும் வகையில் வாட் வரிமுறை நீக்கப்பட்டு பல்வேறு கட்ட நீண்ட ஆலோசனைக்கு பின்பு ஜிஎஸ்டி வரிமுறை கொண்டுவரப்பட்டது.
ஒரே தேசம் ஒரே வரிமுறை
நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினருடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஒரே தேசம் ஒரே வரி (One Nation, One Tax) என்ற முழக்கத்தோடு சரக்கு மற்றும் சேவை வரி என்றும் ஜிஎஸ்டி வரிமுறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் (சில குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர்த்து) தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.
தனித்தனியாக ரிட்டன்கள்
வாட் வரிமுறையில் மூன்று அடுக்கு வரிகளாக இருந்த வரிவிகிதங்களுக்கு பதிலாக ஜிஎஸ்டி வரிமுறையில் நான்கு அடுக்கு (5%, 12%,, 18% & 28%) வரிகள் அமல்படுத்தப்பட்டன. மாதந்தோறும் தாக்கல் செய்யும் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப் பயன் (Input Tax Credit) மற்றும் இறுதியில் செலுத்தவேண்டியது வரி என அனைத்தும் வாட் வரிமுறையில் ஒரே படிவமாக இருந்தது.
கூடுதல் வேலைப்பளு
ஜிஎஸ்டி வரிமுறையில் வாட் வரிமுறை போல் இல்லாமல், கொள்முதல், விற்பனை, மற்றும் உள்ளீட்டு வரிபயன்பாட்டு தொகையை கழித்தது போக மீதம் செலுத்தவேண்டிய வரிக்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி ரிட்டன்கள் தயார் செய்து ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யவேண்டிய நிலை உள்ளது. இது அனைத்து வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினருக்கும் கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துகிறது.
அருண் ஜெட்லிக்கு கோரிக்கை
மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதற்கே கூடுதல் நேரத்தை செலவிடும் நிலை ஏற்படுவதால் வர்த்தகர்களுக்கும் தொழில துறையினருக்கும் தங்களின் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதனை நன்கு உணர்ந்த அனைத்து தரப்பினரும், மாதாந்திர ரிட்டன்களை ஒரே படிவத்தில் தாக்கல் செய்யும் வகையில் மாற்றம் செய்யுமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் கோரிக்கையை பரிசீலித்து மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூடுதல் படிவங்களால் வரி வசூல் பாதிப்பா
ஜிஎஸ்டி வரிமுறையில் அனைத்து பரிவர்த்தனைக்கும் தனித்தனியாக படிவங்கள் இருப்பதாலேயே பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில் துறையினரும், மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்வதை தள்ளிப்போட்டும் ஏமாற்றியும் வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசுகளுக்கும் மாதந்தோறும் கிடைக்கும் வரி வருவாய் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
உள்ளீட்டு வரியை பயன்படுத்த முடியாது
மத்திய மாநில அரசுகளுக்கு உரிய நேரத்தில் வரவேண்டிய வரி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், சரக்குகளை விற்பனை செய்தது மற்றும் சேவைகளை அளித்த வகையில், அதற்கான ஜிஎஸ்டி வரியை வசூலித்த வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் அந்த ஜிஎஸ்டி வரியை ஜிஎஸ்டி ரிட்டன்களோடு முறையாக அரசுக்கு செலுத்தாததால் இந்தப் பக்கம் கொள்முதல் செய்தவர்கள் தாங்கள் செலுத்திய உள்ளீட்டு வரியையும் (Input Tax Credit) பயன்படுத்த முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.
உயர்நீதிமன்ற தீரப்பு
விற்பனை மற்றும் கொள்முதல் என இரண்டு பரிவர்த்தனைகளிலும் ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு ஏற்படுவதால், இனிமேல் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் உரிய நேரத்தில் ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்யாவிட்டால், பின்னர் அபராதத்துடன் முழுமையாக வரி செலுத்தினால் மட்டுமே உள்ளீட்டு வரிப் பயனை பெறமுடியும் என்று தனியார் நிறுவனத்திற்கு எதிராக தெலுங்கான உயர்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரூ.1014 கோடி ஜிஎஸ்டி வரி
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மெகா இன்ஜினியரிங் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான 11 மாதங்களில் செய்த பரிவர்த்தனைகளுக்காக ரூ.1014 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டியதிருந்தது. அதே போல் கொள்முதல் செய்த வகையில் உள்ளீட்டு வரிப்பயன்பாடு (ITC) வகையில் ரூ.968 கோடி இருந்தது. மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டனும் தாக்கல் செய்வதை காலம் தாழ்த்தி வந்தது.
வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
மெகா இன்ஜினியரிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் செலுத்தவேண்டிய நிகர வரி ரூ.46 கோடி மட்டுமே இருந்தது. இதை கண்டுபிடித்த ஜிஎஸ்டி துறை தணிக்கை அதிகாரிகள், அந்த நிறுவனம் செலுத்தவேண்டிய ஒட்டுமொத்த வரியான ரூ.1014 கோடிக்கும் சேர்த்துவைத்து 18 சதவிகித வட்டியை தாளித்துவிட்டனர்.
ரூ.46 கோடிக்கு மட்டுமே வட்டி
ஜிஎஸ்டி துறையின் முடிவை எதிர்த்து மெகா இன்ஜினியரிங் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தெலுங்கானா உயர்நீதிமன்றதில் வழக்கு தொடுத்தது. நிறுவனத்தினர் தாங்கள் செலுத்த வேண்டிய நிகர வரியான ரூ.46 கோடிக்கு மட்டுமே 18 சதவிகித வட்டி விதிக்கவேண்டும். ஆனால் ஜிஎஸ்டி துறையினர் மொத்தமாக செலுத்தவேண்டிய ரூ.1016 கோடிக்கும் 18 சதவிகித வட்டி விதிக்கின்றனர் என்று வாதிட்டனர்.
ரூ.1016 கோடிக்கும் வட்டி
மெகா இன்ஜினியரிங் அன்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் வாதத்தை கேட்ட தெலுங்கான உயர்நீதிமன்ற நீதிபதிகள் இறுதியில் ஜிஎஸ்டி துறையின் பக்கமே நின்றது. அந்த நிறுவனம் தொடக்கம் முதலே தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்வதில் காலம் தாழ்த்தியதால், அரசுக்கு உரிய நேரத்தில் வரவேண்டிய வரி வருவாய் நின்றுவிட்டது. ஆகவே அந்த நிறுவனம் மொத்த தொகைக்கும் 18 சதவிகித வட்டி கட்ட வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பளித்தனர்.
செல்லாது செல்லாது
தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதோடு இல்லாமல், ஜிஎஸ்டியில் பதிவு செய்த அனைவரும் தங்களின் சுய மதிப்பீடு செய்யப்பட்ட ரிட்டன்களை முறையாக உரிய நேரத்தில் தாக்கல் செய்து வரி செலுத்தவேண்டியது கட்டாயமாகும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் கூடவே வட்டியையும் செலுத்தவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் ஏற்கனவே செலுத்திய வரிகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. கூடவே உள்ளீட்டு வரிப் பயனையும் பெற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
என்ன வித்தியாசம் இருக்கு
தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த வரி டிலாயிட் இந்தியா (Deloitte India) நிறுவனத்தில் பங்குதாரர் எம்.எஸ்.மணி, இந்த தீர்ப்பு அனைத்து வர்த்தகர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் நல்ல பாடமாகும். அனைவரும் வாட் வரிமுறை மற்றும் ஜிஎஸ்டி வரிமுறை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்துகொண்டால் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வது எளிதாகும் என்றார்.