மும்பை: இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை வியாபாரத்தில், மீண்டும் Reliance நிறுவனம் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது. 2017 - 18 நிதி ஆண்டை விட 2018 - 19 நிதி ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை முறையே 9 சதவிகிதமும், 3 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறதாம்.
ஏன் திடீரென மீண்டும் இந்திய பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுகிறீர்கள் எனக் கேட்டால் "இதிலும் நம்பர் 1 ஆக வேண்டும்" எனக் களம் இறங்கி இருக்கிறார்களாம்.
இந்தியாவில். 2018 - 19 நிதி ஆண்டில், மற்ற தனியார் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாளர்களை விட ரிலையன்ஸின் பெட்ரோல் வியாபாரம் 21 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். டீசல் வியாபாரத்திலும், தனியார் நிறுவனங்களுக்குள் ரிலையன்ஸ் தான் அதிகபட்சமாக 16 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.
14.3% என்னிடம்
2006-ம் ஆண்டு வரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. 2006 காலங்களில் இந்தியாவின் மொத்த டீசல் சந்தையில் 14.3 சதவிகிதத்தை தன் கையில் வைத்திருந்தது. இந்தியாவின் மொத்த பெட்ரோல் சந்தையில் 7.2 சதவிகிதத்தை தன் கைவசம் வைத்திருந்தது. ஒட்டு மொத்தமாக இந்திய எரிபொருள் சந்தையில் 12 சதவிகிதத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வைத்திருந்தது.
கடையை மூடு
2008-ம் ஆண்டு வரை ரிலையன்ஸ் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து 1,470 பெட்ரோல் பங்குகளை அமைத்தது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தன் 1,470 பெட்ரோல் பங்குகளையும் மொத்தமாக மூடி விட்டது. 2014 நிலவரப்படி இந்தியாவின் மொத்த எரிபொருள் சந்தையில் Reliance நிறுவனத்தின் பங்கு வெறும் 0.5% தான். 2014-க்குப் பிறகு தான் வெகு சில பெட்ரோல் பங்குகளை மட்டும் இயக்கத் தொடங்கியது.
வரலாற்று உச்சம்
கடந்த மார்ச் 2019 கணக்குப்படி ரிலையன்ஸின் 1,372 பெட்ரோல் பங்குகள் மீண்டும் இயக்கத்துக்கு வந்திருக்கின்றன. இந்த 1,372-ல் 59 புதிய பங்குகளும் அடக்கம். இந்த மார்ச் 2019-ல் மட்டும் ரிலையன்ஸ் 560 கோடி லிட்டர் (5.6 மில்லியன் கிலோ லிட்டர்) பெட்ரோல் மற்றும் டீசலை விற்று இருக்கிறார்களாம். இதுவரை Reliance வரலாற்றில் காணாத உச்சம்.
விமான எரிபொருள்
ஏற்கனவே விமான எரிபொருளான Air Turbine Fuel விற்பனையயில் Reliance முன்னனியில் இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு 33 சதவிகிதம் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை மேலும் அதிகப்படுத்த, ஏர் இந்தியாவின் இயக்குநர் குழுவிலேயே இடம் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறதாம். கேட்டால் Reliance குழுமத்தின் பிசினஸை விமான சேவைத் துறையிலும் கொண்டு வரத் தான் ஏர் இந்தியா இயக்குநர் குழுவுக்குச் செல்கிறோம் எனச் சொல்கிறார்களாம். ஒருவேளை ஏர் இந்தியாவின் இயக்குநர் குழுவில் இடம் பிடித்தால் மொத்த ஏர் இந்தியா விமானத்துக்கும் Reliance எரிபொருள் தான் பயன்படுத்தப்படும்.
கப்பல் எரிவாயு
அதோடு ஜனவரி 2020-ல் இருந்து கப்பல்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளில் சல்ஃபரின் அளவு 0.5 சதவிகிதமாக மட்டுமே இருக்க வேண்டும் என International Maritime Organisation (IMO) ஒரு புது விதியைக் கொண்டு வந்திருக்கிறது. இப்போது வரை கப்பல் எரி பொருளில் 3.5% வரை சல்ஃபர் இருக்கலாம். எனவே இந்த துறையையும் கவர் செய்ய, 0.5% சல்ஃபர் உள்ள கப்பல் எண்ணெய்த் தேவைகளையும் கவனிக்க Reliance காத்திருக்கிறார்களாம்.
மேற்கில் கொடி
இப்போதைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள், இந்தியாவின் மேற்கு பகுதிகளான குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலேயே அதிகம் இருக்கின்றனவாம். இனி இந்தியா முழுக்க பரப்ப இருக்கிறார்களாம். மார்ச் 2019 நிலவரப்படி இந்தியாவின் எரிபொருள் சந்தையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள் தான் 90% சந்தையை கட்டுப்படுத்துகின்றன.
2000 புதிய பங்குகள்
இந்த போட்டியைச் சமாளிக்க, Reliance நிறுவனம், BP Plc நிறுவனத்தோடு சேர்ந்து இந்தியாவில் மேலும் 2,000 புதிய பெட்ரோல் பங்குகளை திறக்கப் போகிறார்களாம். ஏற்கனவே Reliance நிறுவனம் இந்தியாவில் 5000 பெட்ரோல் பங்குகளை அமைக்க அனுமதி இருக்கிறது. அதில் 1470-ஐத் தான் அமைத்திருக்கிறது. இப்போது 2,000 பங்குகளை மேற்கொண்டு அமைக்க இருக்கிறது.
2022-ல்
கப்பல் எரிவாயு மாற்றம், விமான எரிபொருள் சப்ளையை அதிகரிக்க ஏர் இந்தியாவில் தலை காட்டுவது, புதிதாக 2000 பெட்ரோல் பங்குகளை இந்தியா முழுமைக்கும் திறப்பது என இவை அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நடக்க இருக்கிறது. எனவே Reliance-ன் பெட்ரோல் மற்றும் டீசல் வியாபாரம், வரும் மார்ச் 2022-ல் வேறு லெவலில் இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்டுகள். இங்கயும் வந்துட்டீங்களா மகா பிரபு..!