Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் நிறுவனத்தை எப்படி இயக்குவது என முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ வங்கி. மற்றொரு பக்கம் Jet Airways நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஜெட் ஏர்வேல் நிறுவனத்தின் பிரச்னைகள் வொவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. முதலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி இருந்த 8,500 கோடி ரூபாய் கடன் செலுத்தவில்லை எனத் தொடங்கிய பிரச்னை படிப்படியாக இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.
சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி, ஹெச் எஸ் பி சி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் கடன் பாக்கி, விமானங்களுக்கான குத்தகைத் தொகை பாக்கி, பயணிகளுக்கான ரீஃபண்ட் தொகை பாக்கி என நொந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்த சம்பவங்களுக்கு அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் இந்திய விமான சேவை நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை ஷார்ப்பாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு ட்விஸ்ட் நடந்திருக்கிறது
புதிய ஆள்
ஜேஸன் அன்ஸ்வொர்த் (Jason Unsworth) என்கிற இங்கிலாந்து தொழில் முனைவோர், தற்போது அட்மாஸ்பியர் இண்டர் காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் (Atmosphere Inter Continental Airlines)நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். இவர் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வந்திருக்கிறார். இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறாராம்.
இலக்கு
Jason Unsworth நடத்தும் அட்மாஸ்பியர் இண்டர்காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு, ஒரு நல்ல தரமான பிரீமியம் விமான சேவை நிறுவனக் குழுமத்தை நான்கு வெவ்வேறு நாடுகளில் நடத்த வேண்டும் என்பது ஆசையாம். அதற்கு முதல் படியாக ஜெட் ஏர்வேஸின் பெரும் பகுதி (51%) பங்குகளை விலை கொடுத்து வாங்க முன் வந்திருக்கிறாராம்.
எஸ்பிஐ கேப்
ஏற்கனவே சொன்னது போல ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளை எல்லாம் எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் குழு தான் பார்த்துக் கொள்கிறது. எனவே எஸ்பிஐ உடன் இந்த பிசினஸ் டீலிங்குகளை பேசிக் கொள்ளுமாறு ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் Jason Unsworth-க்கு வழிகாட்டி இருக்கிறார்களாம். இதை தன் ட்விட்டர் பக்கத்திலேயே மகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார் ஜேஸன் அன்ஸ்வொர்த்.
1500 கோடி முதலீடு
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உடனான முதல் கட்ட சந்திப்புகள் எல்லாம் முடிந்த பின், முதல் கட்டமாக 1500 கோடி ரூபாயை இண்டர் காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப் போகிறாராம். இந்த முதலீட்டுக்கு தேவையான பணத்தை சில இந்திய தொழில்முனைவோர் சார்ந்த முதலீட்டாளர்களிடம் கேட்டு வருகிறாராம். இன்னும் சில வாரங்களில் இந்த 1,500 கோடி ரூபாய் முதலீடு குறித்து பல்வேறு முதலீட்டாளர்களிடம் பேசி முடிவு செய்யப்படுமாம். அதற்கான அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வாங்குவது மற்றும் ஜேஸன் அன்ஸ்வொர்த்தின் எதிர்பாராத முதற் கட்ட 1,500 கோடி ரூபாய் முதலீடுகள் குறித்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தேசிய பங்குச் சந்தைக்கு கடந்த ஏப்ரல் 24, 2019 அன்று தெரியப்படுத்தி இருக்கிறார்களாம்.