டெல்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி 29 பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்துவதற்கான முடிவை வரும் மே 16ஆம் தேதி வரையிலும் இந்திய அரசு ஒத்திவைத்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 25 சதவிகிதம் வரையிலும் அதிகரித்தனர். இதனால் இரு நாட்டு ஏற்றுமதி இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனை உணர்ந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வுகாண விரும்புவதால் இப்போதைக்கு வரி உயர்வை ஒத்தி வைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் இறக்குமதி வரி
நம் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி விதிகளின் படி ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்களுக்கு அதிக அளவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இதுவே நட்பு நாடுகள் மற்றும் வர்த்தகத்திற்கு இணக்கமான நாடுகளாக இருந்தாலும் இறக்குமதி வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
ஹார்லி டேவிட்சனுக்கு 100 சதவிகித வரி
அமெரிக்கா நமக்கு நட்பு நாடாகவும், வர்த்தகத்திற்கு இணக்கமான நாடாகவும் இருந்தாலும், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆடம்பரமான விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்குக்கும் 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.
இறக்குமதி வரி குறைப்பு
ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்டதால் கொதித்தெழுந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்டிரம்ப் உடனடியாக நமது பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து தனது அதிருப்தியை தெரிவித்ததால், ஹார்லி டேவிட்சன் பைக் மீது விதிக்கப்பட்டிருந்த 100 சதவிதிக இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக குறைத்தார்.
ஏட்டிக்கு போட்டி
ஹார்லி டேவிட்சன் பைக் மீதான இறக்குமதி வரியை 50 சதவிகிமாக குறைத்தும் திருப்தி அடையாக ட்டிரம்ப் இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். ஆனாலும் இந்தியப் பிரதமர் எதற்கும் அசைந்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த ட்டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை வேண்டுமென்றே 25 சதவிகிதமாக அதிகரித்தார். இதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
வாதாங்கொட்டைக்கு வரி உயர்வு
அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்வினையாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், வால்நட் மற்றும் பருப்பு வகைகள் உட்பட 29 பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.
முன்னுரிமை கிடையாது
இந்தியாவின் இறக்குமதி வரியை உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா தனது வர்த்தகத்திற்கு இணக்கமான நாடுகளுக்கு வழங்கும் முன்னுரிமை அந்தஸ்தை திரும்பப் பெறப்போவதாக பயமுறுத்தியது.
வரி உயர்வு ஒத்திவைப்பு
இரு தரப்பும் மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரிப்பதால் இரு நாட்டின் வர்த்தகமும் பெரிய அளவில் பாதிப்படைவதை உணர்ந்த இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண விரும்பியதை அடுத்து இந்தியாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும 29 பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வை தற்சமயத்திற்கு ஒத்தி வைத்தது.
மே 16ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான வரி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் இன்று இந்தியா வர உள்ளார். இதனால் இறக்குமதி வரி உயர்வு முடிவை வரும் மே 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
பருப்புக்கு 70 சதவிகித வரி
தற்போது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாதுமை கொட்டை(Wall Nut)க்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த 30 சதவிகித வரியை 120 சதவிகிதமாகவும், சுண்டல், பெங்கால் பருப்பு மற்றும் மசூரி தால் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 சதவிகித வரியை 70 சதவிகிதமாகவும் பயறு வகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 சதவிகித வரியை 40 சதவிகிதமாகவும் இந்தியா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம்
கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியா சுமார் 3.31 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்திருந்தது. அதே சமயத்தில் 1.85 லட்சம் கோடி ரூபாய்க்கு மட்டுமே இறக்குமதி செய்திருந்தது. மொத்தத்தில் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்ததே ட்டிரம்பின் கோபத்திற்கு காரணமாகும்.