டெல்லி: இந்தியாவில் நுகர்வு கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. கார், இருசக்கர வாகனங்கள், விமானப் பயணம், எஃப் எம் சி ஜி என்றழைக்கப்படும் fast-moving consumer goods என பல துறைகளிலும் நுகர்வு குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்த சரிவுகளெல்லாம் கடந்த சில காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய சரிவாக இருக்கின்றன. தற்போது நகர்ப் புற மற்றும் கிராமப் புற மக்களின் வருமான வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கிறது. எனவே தானாக, பொருட்களுக்கான தேவையும் சரிகிறது.
நகர் புற மற்றும் கிராமப் புற மக்களின் வருமான வளர்ச்சிக் குறைவு, அவர்கள் செய்யவிருக்கும் செலவைக் குறைக்கிறது. செலவு குறைவு தான் தேவையைக் குறைக்கிறது. தேவைக் குறைவால், பொருளாதாரத்தில் பணப் புழக்கம் குறைகிறது.
இந்தப் பணப் புழக்கக் குறைவால், அரசின் நெறிமுறைகளை வாடிக்கையாளர்களும், நுகர்வோர்களும் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்கிற ஒரு விதமான நிலையற்ற தன்மை நம் பொருளாதாரத்தில் நிலவத் தொடங்குகிறது என பொருளாதார வல்லுநர்கள் கவலை கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை அமைக்கும் அரசுக்கு, இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, நுகர்வை அதிகரிப்பது தான் தற்போதையே ஒரே வழியாக இருக்கும். இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகள் வராத போதும், ஏற்றுமதி எதிர்பார்த்த அளவுக்கு செய்ய முடியாத போதும், நுகர்வு தானே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.. எனப் பொருளாதார வல்லுநர்களும் தங்கள் கருத்துக்களைச் சொல்கிறார்கள்.
மேலே சொன்ன fast-moving consumer goods (FMCG) துறையில் எப்போதுமே வியாபாரம் சரியாது, ஆனால் ரெசசனே வராது எனச் சொல்ல முடியாது என்கிறார்கள். ஆனால் fast-moving consumer goods (FMCG) துறை ரெசசனை எதிர் கொள்ளக் கூடிய தன்மை கொண்டது என்கிறார் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் மேத்தா.
ஒருவருக்கு வருமானம் குறைந்துவிட்டது என்றாலோ அல்லது வருமானம் வருவது நின்றுவிட்டாலோ கூட, அந்த நபர் குளிக்காமல் இருக்கமாட்டார், பல் துலக்காமல் இருக்க மாட்டார். ஆனால் இருப்பதிலேயே கொஞ்சம் விலை குறைவான சோப், பற்பசைகளைப் பயன்படுத்துவார். இப்படித் தான் fast-moving consumer goods (FMCG) துறை ரெசசனை எதிர் கொள்கிறது. இதனால் இழப்பையும் சந்திக்கிறது. தற்போது ஹிந்துஸ்தான் யுனிலிவரும் சந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்கிறார் சஞ்சீவ்.
கடந்த நான்கு காலாண்டில் ஒரு காலாண்டு கூட ஹிந்துஸ்தான் யுனிலிவரின் நிகர லாபம் 1550 கோடி ரூபாயைத் தொடவில்லை. ஆனால் கடந்த ஜூன் 2018 காலாண்டிலேயே ஹிந்துஸ்தான் யுனிலிவர் 1,529 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பார்த்துவிட்டது. செப்டம்பர் 2018 காலாண்டில் 1,525 கோடி ரூபாயை நிகர லாபமாகப் பார்த்தது. டிசம்பர் 2018-ல் 1,444 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியது. தற்போது மார்ச் 2019 மீண்டும் 1,538 கோடி ரூபாயை ஈட்டி இருக்கிறது. இப்படித் தான் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையின் போது, தங்கள் வியாபாரத்தை எதிர்கொள்ளும் போல.
எனவே fast-moving consumer goods (FMCG) துறையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றால் மேலே சொன்னது போல வியாபாரம் மந்தமாக இருக்கும் எனச் சொன்னார். இந்தியா முழுமைக்கும் ஒரு பொருளாதார மந்தநிலை நிலவுவதால், அடுத்த சில காலாண்டும் இதே போல கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். அதனால் வருவாய் மற்றும் நிகர லாப வளர்ச்சியும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது எனவும் சொல்லி இருக்கிறார்.