ஹைதராபாத்: இரண்டே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 2019 ஐபிஎல் ஃபைனல் (2019 IPL Final) டிக்கெட்டுகள்.
இதைப் படிக்க ஏதோ பெரிய சாதனை படைத்தது போலத் தெரிந்தாலும், பல்வேறு கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் ஐபிஎல் நிர்வாகத்தின் மீதும், பிசிசிஐ மீதும் ஒரு சந்தேகப் பார்வை விழ வைத்திருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (மே 07, 2019) அன்று எந்த வித பெரிய முன்னறிவிப்புகளும், பரபரப்பும் இல்லாமல் 2019 ஐபிஎல் ஃபைனல் (2019 IPL Final)-களுக்கான டிக்கெட்டுகள், ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.
ஆன்லைனுக்கு துண்டுச் சீட்டுகள்
இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய துண்டுச் சீட்டுக்களில் (Flyers) விளம்பரங்கள் வந்திருந்ததாம். ரசிகர்கள் அடித்துப் பிடித்து வலைதளத்தைத் திறந்து பார்த்தால் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிப்புகள் மட்டுமே வந்ததாம். இதனால் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நெறிமுறைப்படுத்தும், பிசிசிஐ நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பொது மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
120 நொடியில் 39000 இருக்கைகள்
2019 ஐபிஎல் ஃபைனல் (2019 IPL Final), வரும் மே 12, 2019 அன்று, ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த விளையாட்டு அரங்கத்தின் மொத்த கொள்ளளவே 39,000 பேர் தானாம். வழக்கமாக இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் 25,000 முதல் 30,000 டிக்கெட்டுகள் விற்பனை ஆகுமாம். ஆனால் 2019 ஐபிஎல் ஃபைனலுக்கான அறிவிப்புகளே பெரிய அளவில் வெளியாகாத போது அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்திருப்பது ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
9 வகை டிக்கெட்டுகள்
Rs 1000, Rs 1500, Rs 2000, Rs 2500, Rs 5000, Rs 10000, Rs 12500, Rs 15000 and Rs 22500 என டிக்கெட் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும். இந்த விலைக்கு தகுந்தாற் போல இருக்கைகள் பெவிலியன்கள் ஒதுக்கப்படும். ஆக மொத்தம் 9 வகையான விலையுள்ள 9 வகை டிக்கெட்டுகள். சரி ஆன்லைனில் டிக்கெட் விற்ற EventsNow என்கிற நிறுவனத்தின் வலைதளத்தில் பார்த்தால் Rs 1000, Rs 1500, Rs 2000, Rs 2500, Rs 5000 வரைக்குமான 5 வகை டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டதாம்.
டிக்கெட் விற்றவர்
இது குறித்து EventsNow நிறுவனத்திடம் விசாரித்த போது "பிசிசிஐ கொடுத்த டிக்கெட்டுகளை அப்படியே விற்றுக் கொடுத்திருக்கிறோம். அவ்வளவு தான். அதனால் டிக்கெட் விவரங்களை நாங்கள் வெளிப்படையாக வெளியிட முடியாது" என ஒற்றை வரியில் பதில் கொடுத்திருக்கிறார்கள்.
விளக்கம் தேவை
கிரிக்கெட் ஆர்வலர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பல தரப்பினரும், 2019 ஐபிஎல் ஃபைனல் (2019 IPL final) டிக்கெட் விற்பனை குறித்து பிசிசிஐ அல்லது EventsNow இருவரில் யாராவது வாய் திறந்து விளக்கமளிக்க வேண்டும் எனக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.