FASTag, நம் கார்களின் முன் பக்க கண்ணாடியில் ஒட்டி வைத்திருக்கும் ஒரு அட்டை தான். இது இருந்தால் போதும், FASTag வசதி உள்ள டோல்கேட்களில் வாகனத்தை நிறுத்தாமல், டோல் கட்டணத்தை தானியங்கி முறையில் (ஆட்டோமேட்டிக்காக) செலுத்திவிட்டு போய்க் கொண்டே இருக்கலாம்.
நம் காரில் ஒட்டி இருக்கும் FASTag அட்டையை, டோல்கேட்களில் இருக்கும் FASTag கண்டுணரும் ரேடியோ அலைவரிசைக் கருவிகள் மூலமாக கண்டு பிடித்து, நம் FASTag கணக்கில் இருக்கும் பணத்தை டோல் கட்டணமாக எடுத்துக் கொள்ளும் அல்லது FASTag உடன் இணைந்திருக்கும் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாகக் கழித்துக் கொள்ளப்படுமாம்.
இந்த வசதி தற்போது இந்தியாவின் அனைத்து டோல்கேட்களிலும் வரவில்லை. ஆனால் FASTag வசதி உள்ள டோல்கேட்களில், FASTag இல்லாத வாகனங்களில் பயணித்தால் இரண்டு மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டும் எனச் சட்டம் கொண்டு வர பாஜக அரசு யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
முறைப்படும்
இதனால் முறையாக FASTag வாங்கி இருக்கும் வாகனதாரர்களுக்கு, டோல்கேட்களில் நிற்க வேண்டிய நேரம் பெரிய அளவில் மிச்சமாகுமாம். அதோடு இந்தியாவில் FASTag சேவையும் அதி வேகமாகப் பரவும் என ஆழமாக யோசித்து வருகிறார்களாம் பாஜகவினர்.
நெடுஞ்சாலைத் துறை
இதைக் குறித்து சில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசிய போது "ஏற்கனவே FASTag இல்லாத வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் இது நாள் வரை நெடுஞ்சாலைத் துறை அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தவில்லை. ஆனால் இப்போது வாகன நெரிசல்களைக் குறைக்க, டோல்கேட்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைக் குறைக்க, FASTag இல்லாத வாகனங்கள், FASTag வசதி உள்ள நெடுஞ்சாலைகளில் பயணித்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறோம்" என்கிறார்கள்.
விரைவில் அறிவிப்பு
இதுவரை நெடுஞ்சாலைத் துறை FASTag கட்டாயமாக வாகனங்களில் பொருத்துவதற்கான கடைசி தேதி விவரங்களைக் குறிப்பிடவில்லை. கூடிய விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சக உயர் அதிகாரிகளிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இந்த அறிவிப்புகளை ஒத்தி வைத்திருக்கிறார்களாம். மீண்டும் பாஜக அரசு வந்தால், உடனடியாக இது சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாமாம்.
ஏன் கொண்டு வந்தார்கள்
இந்த FASTag திட்டத்தைக் கடந்த 2014 - 15-ம் ஆண்டு காலத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்டுகளை அதிகரிக்க, பெட்ரோல் டீசல் சிக்கனத்தை மேம்படுத்த, நெடுஞ்சாலைத் துறைக்கு ஏற்படும் வருவாய் சுரண்டல்களைத் தடுக்க மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வர இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.
எவ்வளவு வசூல்
கடந்த ஏப்ரல் 2019 நிலவரப்படி இந்தியாவில் 47 லட்சம் FASTag மட்டுமே வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 47 லட்ச அட்டைகள் மூலம் சுமார் 585 கோடி ரூபாய் டோல் கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்தியாவின் 496 மாநில மற்றும் தேசிய டோல்கேட்களில் இந்த FASTag முறையில் கட்டணம் வசூலித்திருக்கிறார்கள்.