சான் பிரான்சிஸ்கோ : அமேசான் நிறுவனம் பேக்கிங் செக்சனில் வேலை பார்க்கும் பணியாளர்களிடம் வேலையை ராஜினாமா செய்தால், தனது டெலிவரி செக்சனிலேயே சுயதொழில் செய்ய உதவி முதலாளியாக்குவதாக உறுதி அளித்துள்ளதோடு, தொழிலை ஆரம்பிக்க பணம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளது.
ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொடி கட்டி பறக்கிறது அமெரிக்காவின் அமேசான் நிறுவனம். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால், இன்றைக்கு தருவோம் என தேதிகளை சொல்லி, எங்கு வேண்டுமானாலும் டெலிவரி செய்கிறது.
இதனால் இந்த நிறுவனத்திற்கு ஆர்டர்கள் உலகம் முழுவதும குவிந்து வருகிறது. ஆர்டருக்கு தகுந்தாற் போல் பொருட்களை விரைவாக பேக்கிங் செய்து கொடுத்தால் டெலிவரி செய்ய முடியும் என்ற நிலையில் அமேசான் இருக்கிறது.
குவியும் ஆர்டர்கள்
தற்போது அமெரிக்கா முழுவதும் 55 இடங்களில் பேக்கிங் தொழிற்சாலையை அமேசான் வைத்துள்ளது. அங்கு சுமார் 2000 பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் கைகளால் ஒவ்வொரு பொருளையும் பக்கவாக பேக் செய்து அனுப்பும் வேலையை செய்து வருகிறார்கள். ஆனால் அமேசான் நிறுவனம் வாங்கி குவிக்கும் ஆர்டர்களை இரண்டு நாளில் டெலிவரி செய்து வருகிறது. இனி ஒரே நாளில் டெலிவரி செய்ய வேண்டும் என விரும்பியது. அதற்கு கைகளால் பேக்கிங் செய்தால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்தது.
700 பெட்டிகள்
இதனால் பேக்கிங் செக்சனுக்கு மிஷினை இறக்க முடிவு செய்துள்ளது. இந்த மெஷின் பொருட்களை ஸ்கேன் செய்து, பக்கவாக பேக்கிங் செய்து குவித்து கொண்டே இருக்கும். அதை பக்கத்தில் இருந்து இரண்டு பேர் எடுத்து போட்டால் மட்டும் போதுமாம். இந்த மெஷின் மணிக்கு 700 பெட்டிகள் வரை பேக்கிங் செய்யுமாம்.
வேலையை விட்டால் ஆபர்
இதனால் 2000 பேரில் சுமார் 1300பேரை வேலையைவிட்டு நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவர்களிடம் வேலையை ராஜினாமா செய்தால் ரூ.7 லட்சம் உதவி தொகை, 3 மாத சம்பளம் மற்றும் சுய தொழில் தொடங்க வாய்ப்பு ஆகிவற்றை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
வேலை வாய்ப்பு
விரைவாக டெலிவரி செய்வதற்காக ஜுன் மாத இறுதியில் புதிய திட்டத்தினை தொடங்கும் அமேசான் நிறுவனம், இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க, வேலையை விடும் பேக்கிங் செக்சன் ஊழியர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறியுள்ளது. இந்த தகவலை அமேசானின் முதுநிலை துணை தலைவர் டேவ் கிளாக் தெரிவித்துள்ளார்.