மும்பை: லோக்சபா தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மத்திய மாநில அரசுகள் நலத்திட்டங்களுக்கு செலவிடும் பணத்தை குறைத்துக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வங்கிகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு ரொக்க பற்றாக்குறை ரூ.40,859 கோடியாக அதிகரித்துள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரொக்க கையிருப்பானது சுமார் ரூ.15,857 கோடியாக இருந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால், இதன் தாக்கம் வங்கிகளின் வட்டி விகித பரிமாற்றத்திலும் எதிரொலிக்கக்கூடும் என்றும் புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலும் பின்னர் ஏப்ரலிலும் வங்கிகளக்கு அளிக்கும் கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைத்து குறிப்பிடத்தக்கது.
ரொக்க இருப்புகள் மாற்றம்
பொதுவாக அனைத்து வங்கிகளும் தங்களின் தினசரி பணப்பரிமாற்றத்தில், அதாவது வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகளில் செய்யும் ரொக்க டெபாசிட் (Cash Deposit) மற்றும் ரொக்க எடுப்புகள் (Cash Withdrawl) போக மீதமுள்ள ரொக்க இருப்புகளை (Surplus Cash) ரிசர்வ் வங்கிகளுக்கு மாற்றிவிடுவது வழக்கம்.
வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி
சில நாட்களில் ரொக்க டெபாசிட்களை விட ரொக்க எடுப்புகள் (Withdrawl) அதிகமாக இருக்கும்போது வங்கிகளின் ரொக்க இருப்பு பற்றாக்குறையாக (Shotage or deficit) மாறிவிடும். இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாக பெற்றுக்கொள்ளும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இதற்கு வங்கிகள் வட்டி அளிக்கின்றன.
நன்னடத்தை விதிகள் அமல்
தற்பொழுது லோக்சபா தேர்தல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும் தேர்தல் நடைமுறை கடந்த மார்ச் மாதமே தொடங்கிவிட்டபடியால், நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் மத்திய அரசும் மாநில அரசுகளும் அத்தியாவசியத் தேவைகளான சம்பளம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கின்றன.
பணப்புழக்கம் முடக்கம்
நன்னடத்தை விதிகளின் காரணமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில், ரொக்கப் பரிமாற்றமும் அடியோடு குறைந்துவிட்டது. இதனால் அரசு கருவூலகத்திலிருந்து வங்கிகளுக்கு செல்லும் ரொக்கமும் தடை பட்டுள்ளது. இதனால் வங்கிகளிலும் பணப்புழக்கம் அடியோடு குறைந்துவிட்டது.
மார்ச்சில் பணப்புழக்கம் தாராளம்
தேர்தல் வரும் என்பதால் அதற்கு முன்பாக மார்ச் மாதம் வரையிலும், மத்திய மாநில அரசுகளும் வாக்காளர்களை கவர்வதற்காக, இதுவரையிலும் செயல்படுத்தாத சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றவும் பிற உதவிகளை நிறைவேற்றவும் தேவைப்படும் ரொக்கத்தை அளவுக்கு அதிகமாக எடுத்து இருப்பு வைத்து பயன்படுத்தி இதனால் மார்ச் மாதம் வரையிலும் பணப்புழக்கம் தாராளமாக இருந்து வந்தது.
ஏடிஎம்களில் பணம் இல்லை
அதேபோல் எதிர்கட்சிகளும் உதிரிக்கட்சிகளும் நாட்டிலுள்ள அனைத்து ஏடிஎம்களின் மூலமாக பணத்தை எடுத்து பதுக்கி வைத்து வாக்காளர்களை கவனித்துக்கொண்டு வருகின்றன. இப்படி ஆளும் அரசுகளும் எதிர்கட்சிகளும் போட்டி போட்டு பணத்தை சூறையாடுவதால் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பெரும்பாலான நேரங்களில் பணமே இருப்பதில்லை என்று சாமானிய மக்கள் புலம்புகின்றனர். முக்கியமாக 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டதோ என்று வாயடைத்துக் கிடக்கின்றனர்.
புதிய ஆட்சியில் பணப்புழக்கம் கூடும்
அரசியல் கட்சிகளின் இந்த கபளீகரத்தால், அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களிலும் பணப்புழக்கம் சரளமாக கிடைப்பதற்கு இன்னும் குறைந்த பட்சம் 2 வாரங்களாவது ஆகும் என்று தெரிகிறது. வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய ஆட்சி அமைந்த பிறகே வங்கிகளிலும் பணப்புழக்கம் அதிகரித்து ரொக்க இருப்பு கூடும் என்றும் அதுவரையிலும் இந்த பற்றாக்குறை இருப்பு (Liquidity crunch) சிக்கல் நீடிக்கவே செய்யும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவிக்கிறார்கள்.
காத்திருக்கும் காலங்கள்
சில நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் கூட பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலித் தொகையை அளிப்பதற்காக வங்கிகளை அனுகினால், அங்கே சில மணி நேரம் வரையிலும் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.
ஏப்ரலில் முடக்கம்
வங்கிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து விளக்கமளித்த எஸ்பிஐ வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சவும்யா கந்தி கோஷ் (Soumya Kanti Ghosh), மத்திய அரசின் செலவினங்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே முடக்கப்பட்டுவிட்டதால் அதன் தாக்கம் வங்கிகளிலும் எதிரொலித்து எப்போதும் இல்லாத அளவில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்றார்.
நிலைமை சிக்கலாகும்
கோட்டக் மஹிந்த்ரா வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் உபஷ்ணா பரத்வாஜ் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு ஏற்பட்ட ரொக்கப் பற்றாக்குறை என்பது முன் எப்போதும் இல்லாத அளவில் உள்ளது. இந்த நிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமானால், நிலைமை இன்னும்கூட மோசமாகலாம். அதோடு ஜிஎஸ்டி வருவாயும் இல்லாத நிலையில் அரசாங்க செலவினங்களுக்கு திண்டாடவேண்டியதிருக்கும் என்று கவலைப்பட்டார்.
பற்றாக்குறை ரூ.1.49 லட்சம் கோடி
கடந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளின் ரொக்க இருப்பு அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. வங்கிகளின் ரொக்க இருப்பு ஏப்ரலில் காணாமல் போய் ரொக்கப் பற்றாக்குறையாக 1.49 லட்சம் கோடி ரூபாயாக கூடிவிட்டது. இதை முன்கூட்டியே உணர்ந்தோ என்னவோ ரிசர்வ் வங்கியும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வட்டி விகிதத்தை குறைத்தது. இருந்தாலும் அது பயனளிக்கவில்லை. இது வங்கிகள் அளிக்கம் வட்டி பரிமாற்றத்திலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
2 வாரங்களில் சகஜமாகும்
வங்கிகளின் ரொக்க பரிமாற்றத்தை சரி செய்யும் விதமாக ரிசர்வ் வங்கி எடுத்த தொடர் முயற்சிகளினால் தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருகிறது. நிலைமை சகஜமாக இன்னும் 2 வாரங்கள் வரை பொறுத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த மாத இறுதி வாக்கில் தேர்தல் விதிமுறைகள் முடிந்தவுடன் ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து வங்கிகளின் பணப்புழக்கம் அதிகரித்து பற்றாக்குறை நீங்கும் என்றும் சவும்யா கந்தி கோஷ் கூறினார்.
அடுத்த மாதம் சரியாகும்
அடுத்த மாதத் தொடக்கத்தில் மத்திய அரசின் வழக்கமான செலவினங்கள் தொடங்கினால் வங்கிகளின் பணப் பற்றாக்குறை நீங்கி பழைய நிலைமைக்கு திரும்பும் என்று கோட்டக் மஹிந்த்ரா வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் உபஷ்ணா பரத்வாஜூம் இதே கூற்றை வலியுறத்தினார்.
ரொக்க உபரி ரூ44,315 கோடி
கடந்த ஏப்ரல் மாதத்தில் ரொக்கப் பற்றாக்குறை 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து ஏப்ரல் இறுதி நாளில் 79ஆயிரத்து 406 கோடி ரூபாய் உபரியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து மே 13ஆம் தேதியன்று ரொக்க உபரியாக 44 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த 2018ஆம் ஆண்டின் இதே காலத்தில் பூஜ்யமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிமார்கெட்டில் விற்பனை
ரொக்கப் புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி வெளிச் சந்தையில் சுமார் 70ஆயிரத்து 226 கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்களை விற்று பணமாக்கி வங்கிகளின் புழக்கத்திற்கு விட்டது. இதன்பின்பு பணப்புழக்கம் சீரடைந்து தற்போது உபரி ரொக்க இருப்பாக 44ஆயிரத்து 315 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.