டெல்லி : தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் உரிமைப் பங்கு வெளியீடு மூலம் ரூ.25,000 கோடி திரட்டப்பட்டுள்ளதாம்.
ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் வந்ததிலிருந்தே அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இது சறுக்கலே. இருப்பினும் பார்தி ஏர்டெல் வோடபோன் நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக மாறி மாறி பல ஆஃபர்களை வழங்கி வந்தன.
இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க நினைத்ததே தவிர, ஒரு புறம் கிடைக்கும் லாபத்தை மறந்தன. இந்த நிலையில் கடனை கட்டுவதற்காகவே இந்த உரிமை பங்கு வெளியீட்டை வெளியிட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் முன்னரே அறிவித்திருந்தது. .
உரிமைப் பங்கு வெளியீடா?
அதென்ன உரிமை பங்கு வெளியீடு என்கிறீர்களா? ஏற்கனவே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம், ஏற்கனவே உள்ள பங்கு தாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு விலையில் பங்குகளை வழங்குவதற்கு உரிமை பங்கு வெளியீடு என்று பெயர்.
மூலதனத்தை அதிகரிக்க வாய்ப்பு!
இதன் மூலம் பங்குதாரர் அதன் மூலம் பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு வெளியிடப்படும் உரிமை பங்கின் விலை சந்தை பங்கின் விலையை விட கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.
ரூ.25,000 கோடி திரட்டல்
இவ்வாறு உரிமை பங்கு வெளியீடு கடந்த மே3 முதல் மே17 வரை நடந்தது. இதன் மூலம் இந்த நிறுவனம் சுமார் ரூ.25,000 கோடி நிதியை திரட்டியுள்ளதாகவும் தற்போது அறிவித்துள்ளது.
பெரிய உரிமை பங்கு வெளியீடு
அதோடு இந்த உரிமைப் பங்கு வெளியீடு தான் இந்த நிறுவனத்தின் பெரிய பங்கு வெளியீடு என்றும் கூறியுள்ளது பார்தி ஏர்டெல். இதோடு வெளி நாட்டு நாணயத்தின் நிதி பத்திரத்தின் மூலமாக ரூ.7000 கோடி நிதி திரட்டவும் திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளது இந்த நிறுவனம்.
மூலதனத்தை அதிகரிக்க பயன்படும்
இவ்வாறு திரட்டப்படும் நிதியானது நிறுவனத்தின் மூலதனத்தினை அதிகரிக்க பயன்படுவதோடு, தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கும் பயன்படும் என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.
தொழில்னுட்பத்தை வலுபடுத்த உபயோகபடுத்தபடும்
அதோடு வலுவான வாடிக்கையாளர் எண்ணிக்கையையும், அதோடு தொழில்நுட்ப கூறுகளை அதிகப்படுத்தவும் இந்த நிதி உபயோகப் படுத்தப்படும் என்றும் பார்தி ஏர்டெல் கூறியுள்ளது.
ஆப்ரிக்காவில் வருவாய் சூப்பர்
இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மார்ச் மாத காலாண்டில் நிகர இலாபம் 29% அதிகரித்தது, இந்த வருமான ஆதாயம் எதிர்பார்க்காத ஒன்று என்றும் கூறியுள்ளது ஏர்டெல். இதற்கு காரணம் ஆப்ரிக்கா வணிக நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு, இந்தியாவின் மொபைல் சேவைகளில் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுகட்ட உதவியது என்றும் அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.
போட்டியாளர் ஜியோ
இதே பார்தி ஏர்டெல்லுக்கு போட்டி நிறுவனமான, முகேஷ் அம்பானியின் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் நிகர இலாபம் 82.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 82.9 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.