பெங்களூரூ : இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதை மேம்படுத்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த இன்சூரன்ஸ் முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஐஆர்டிஏஐ சில இன்சூரன்ஸ் விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதில் மூளை வளர்ச்சி குறைபாடு, சிறுமூளை பாதிப்பு, ஆட்டிசம், பேச்சு குறைபாடு மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது.
அதோடு பாலினம், பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் இன்சூரன்ஸ் வழங்குவதில் பாரபட்சமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெறுபவருக்கு இன்சூரன்ஸ் செய்யவோ அல்லது இன்சூரன்ஸ் தொகை வழங்கவோ மறுக்க கூடாது.
மேலும் நோயாளி இனிமேல் உயிர் பிழைக்கமாட்டார் என்று சான்றிதழ் வழங்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுக்கலாம். ஆனால் அதுவரையிலான நோயாளிக்குண்டான இன்சூரன்ஸ் செய்யவோ அல்லது செலவுத்தொகையை வழங்கவோ மறுக்கக் கூடாது.
அதோடு இளம் பெண்கள் மற்றும் வயதான பெண்கள் அதிக அளவில் ரத்தப்போக்கு, ஹார்மோன் மாறுதல் அல்லது மாதவிடாய் பிரச்னையால் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்படும் பெண்களுக்கு சிகிச்சை பெற வசதியாக மருத்துவ இன்சூரன்ஸ் அளிக்க வேண்டும். அதுபோன்ற சிகிச்சைக்கான இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுக்கக் கூடாது.
இதோடு சாகச பயணம் குறித்த ரேஸ்கள், பாராசூட் சாகசம், ஆற்றில் படகு பயணம், கார் பந்தயம், அதோடு பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கம்பலா போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் செய்வதில் தயக்கம் இருக்கக்கூடாது.
இந்த புதிய இன்சூரன்ஸ் விதிமுறைகள் வீர விளையாட்டுகளில் ஆர்வமிக்க விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 8 ஆண்டுகள் தொடர்ந்து இன்சூரன்ஸ் செய்திருப்பவர்கள், புகைப்பிடிப்பவராக தெரியவந்தாலோ அல்லது ஏற்கனவே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்தாலும் அவர்களுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையை வழங்க மறுக்க முடியாது என்பது தான்.
ஐ.ஆர்.டி.ஏ.ஐவின் இந்த புதிய இன்சூரன்ஸ் விதிமுறைகளால் பலருக்கு மிக உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இந்த விதியால் வீர விளையாட்டுகளில் ஆர்வமிக்க விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் புதிய உந்துதலை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.