மும்பை: இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மும்பை முதல் நியூயார்க் வரை செல்லும் நேரடி விமானங்களை ரத்து செய்ய உள்ளதாம்.
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் செல்லும் இந்த நேரடி விமானத்தில் பயணம் செய்ய யாரும் அதிகமாக வருவதில்லையாம். இதனால் ஏர் இந்தியாவுக்கு மிக நஷ்டமே ஆகிறதாம்.
இதனால் விரைவில் இந்த சேவையை நிறுத்த உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மும்பை முதல் நியூயார்க்கின் ஜான் கென்னடி விமான நிலையத்திற்கு, கடந்த டிசம்பர் 2018 ல் இருந்து நேரடி விமான சேவைகளை ஏர் இந்தியா தொடங்கியது. அதுவும் வாரத்திற்கு மூன்று முறை விமானத்தை இயக்கியது.
எனினும் மும்பை-நியூயார்க் விமான சேவை கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டதால், தேசிய விமான நிறுவனம் ஏர் இந்தியாவை நிறுத்தி வைத்தது. இது வரும் ஜூன் மாதத்தில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மும்பை-நியூயார்க் நேரடி விமானத்துக்கு அதிகம் யாரும் வருவதில்லை என்றும், இதனால் இந்த விமான சேவையை நிறுத்த உள்ளதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் விமான நிலையத்தை மூடப்பட்டதன் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்க விமானங்கள் பறக்க வேண்டிய நேரம் அதிகரித்துள்ளது. அதோடு ஏர் இந்தியா விமானம் விண்டர் சீசனுக்கான அட்டவணையும் இன்னும் சேர்க்கப்படவில்லை என்றும், பொதுவாக அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தொடங்கும் என்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதோடு வாஷிங்டன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு நியூ டெல்லியிலிருந்து விமான சேவைகளை இயக்க ஏர் இந்தியா பொதுவாக போயிங் 777-300 பயன்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இந்திய விமான நிறுவங்களுக்கு இது போதா காலமே. ஏற்கனவே தனியார் துறை விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடன் பிரச்சனையால் தனது விமான சேவையை நிறுத்தி விட்டு ஏலத்திற்காக காத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் பொதுத் துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள், இன்னும் ஏர் இந்தியாவை பிரச்சனைக்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது.