டெல்லி: எல்லா பயலும் எங்க கீழ தான்..! மாநில அரசுகளை உடைத்தெறியும் Modi சர்க்கார் 2.0 திட்டம்..! என்கிற தலைப்பில் மோடியின் 2.0 அரசு முன்னெடுக்க இருக்கும் தொழிலாளர் (Labor), நிலம், பொதுத் துறை நிறுவன சீர் திருத்தங்களைப் பற்றியும், அது எப்படி, யாருக்கு சாதகமாகவும், நடுநிலையகவும் வர வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாக எழுதி இருந்தோம்.
சொல்லி வைத்தாற் போல மோடி அரசு, வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாராட்டக் கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களைத் தாக்கல் செய்யவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவும், உள்நாட்டில் இருக்கும் பெரிய கார்ப்பரேட் தலைகளுக்கு சாதகமாகவும் சட்டங்களை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யப் போவதாக மோடி அரசு அதிகாரிகளும்,. குறிப்பாக நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமாரும் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள். இதை பல ஊடகங்களும் தெளிவாகச் சொல்லி எச்சரித்திருக்கிறார்கள்.
அராஜகம்
தன் சம்பளத்தைக் கேட்ட பெண்ணை அடித்துக் கொடுமைப் படுத்திய உத்திரப் பிரதேச மாநிலச் சம்பவம், நாள் முழுக்க உணவு டெலிவரி செய்பவர்கள் தங்கள் உரிமையைக் கூட பேச முடியாமல் கொடுக்கும் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய அசிங்கத்தில் இருக்கும் தமிழகம், Hire and Fire மாடல் ஐடி மட்டுமின்றி மற்ற இந்திய துறைகளுக்கும் பரவி வரும் கொடிய நிலை.. இப்படி பட்டியல் போடும் எல்லாமே கார்ப்பரேட் கைங்கர்யம் தான். இதில் வெளிநாட்டு கார்ப்பரேட், உள்நாட்டு கார்ப்பரேட் என எந்த வித்தியாசமும் கிடையாது.
நீதி கிடைக்கிறதா..?
இன்று வரை தங்கள் உரிமைகளைக் கேட்டு நீதி மன்றம் அல்லது அரசாங்கப் படியேறும் 100 தொழிலாளர்களில் இரண்டு பேருக்கு நியாயம் கிடைத்தாலே பெரிய விஷயம். இந்த சூழலில் தொழிலாளர்களுக்கு சாதகமாக 44 சட்டங்கள் இருக்கின்ற போதே இந்த கொடுமை. இப்போது இந்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக, அதுவும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இயற்றும் போது எப்படி தொழிலாளர் பக்கம் நின்று தொழிலாளர் பிரச்னைகளை அரசாங்கம் அணுகும்..? இதற்கு சமீபத்தில் நடந்த மேகாலயா நிலக்கரி சுரங்க இறப்புகளே சாட்சி. சரி இவர்கள் விஷயத்துக்கு வருவோம்.
ஓகே சொன்ன கூட்டம்
தற்போது அமித் ஷா, நிர்மலா சீதாராமன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், வணிகம் மற்றும் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர்கள் எல்லாம் ஒன்று கூடி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்களாம். அதோடு வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே லோக் சபாவில் வரைவை தாக்கல் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
முதல் இரண்டு சட்டங்கள்
EPFO சட்டம், தொழிலாளர்கள் மாநில இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் சட்டம், பிள்ளை பேறு கால சலுகைகள் சட்டம், கட்டட மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் சட்டம், தொழிலாளர் நஷ்ட ஈடு சட்டம் போன்றவைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டம் என் ஒன்றைக் கொண்டு வரப் போகிறார்களாம்.
சுரங்கச் சட்டம், ஆலைப் பணியாளர்கள் சட்டம், துறைமுகப் பணியாளர்கள் பாதுகாப்பு நலம் மற்றும் சுகாதாரச் சட்டங்களை எல்லாம் ஒன்று சேர்த்து தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலச் சட்டங்கள் என்கிற பெயரில் இயற்றப் போகிறார்களாம்.
அடுத்த 2 சட்டங்கள்
குறைந்த பட்ச கூலிச் சட்டம், கூலி கொடுக்கும் சட்டம், போனஸ் கொடுக்கும் சட்டம், சம ஊதியச் சட்டம் போன்றவைகள் எல்லாம் ஒன்று சேர்த்து ஊதியம் மற்றும் கூலிச் சட்டங்கள் என ஒன்றைக் கொண்டு வரப் போகிறார்களாம்.
தொழிற்துறை உறவில் தொழிலாளர் வரையறைச் சட்டங்கள், தொழிற்சாலை பிரச்னைச் சட்டங்கள், வணிக யூனியன் சட்டங்கள், தொழிற்துறை வேலைவாய்ப்புச் சட்டங்கள் எல்லாம் ஒன்றிணைத்து தொழிற்துறை உறவுச் சட்டம் என்கிற பெயரில் கொண்டு வருகிறார்களாம். இதனால் இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் பறக்கும் என நம்புகிறார்கள் பாஜக அமைச்சர்கள் மற்றும் ராஜிவ் குமார்.
அந்தக் கட்டுரையில் இருந்து
நில சீர் திருத்தம் என்கிற பெயரில் இந்தியாவை குறுக்கும் மறுக்குமாக வெட்டி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்ட நிலத்தை, ஜோடி ஒரு கோடி என விற்கப் போகிறீர்களா..?
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்கிற தத்துவத்தை உடைத்து நான் தான் எல்லாம், உனக்கு ஒத்த ரூவா வேணும்னா கூட நீ எங்கிட்ட தான் வரணும், கையக் கட்டித் தான் நிக்கணும்... என மாநில அரசுகளின் வருவாயில், ஜிஎஸ்டியை வைத்து சுருட்டி விட்டீர்கள். இப்போது நில சீர் திருத்தச் சட்டங்கள் மூலம் மாநில அரசின் அதிகாரத்தையும் பறிக்கப் போகிறீர்களா..?
ஆப்பிள் நிறுவனத்தை கூட அசால்டாக அள்ளி ஓரங்கட்டிய சவுதி அராம்கோ நிறுவனத்தைப் பார்த்த பிறகும் பொதுத் துறை நிறுவனங்களை கூறு 30 ரூபாய் என பொட்டலம் போடப் போகிறீர்களா..?
சிரமம் தான்
இதெற்கெல்லாம் ‘ஆம்' என விடையளிப்பீர்கள் என்றால், பிடித்தம் போக, வாரம் 286 ரூபாய் கூலி வாங்கி கஞ்சி குடித்து அழகான இந்தியாவை அசிங்கப்படுத்தும் ஆண்டி இந்தியர்களைப் பற்றியோ... PF, ESI, Professional Tax போன்ற இத்தியாதிகள் எல்லாம் போக மாதம் 18,463 ரூபாய் 25 பைசா வாங்கி ஓட்டை ஒடிசல் நிறைந்த 552 சதுர அடி வீட்டில் 6 பேர் குடியிருக்கும் தேசத் துரோகிகளைப் பற்றியோ... கவலைப்படவில்லை என்பதை சோடா குடித்து ஜீரணிக்க வேண்டி இருக்கிறது.
பேனாவை மாற்றுங்கள்
இப்படி அந்நிய நேரடி முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்படும் தொழிலாளர் நலச் சட்டங்கள் மேலே சொன்ன கூலித் தொழிலாளிக்கும், மாதச் சம்பளம் வாங்கும் ஊழியனுக்கும் என்ன சாதகத்தைக் கொடுத்துவிடும்..? JRD TATA-வினால் முன்னெடுக்கப்பட்டு, கொண்டு வரப்பட்ட இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி எழுதும் உங்கள் பேனா... தொழிலாளர்களிடம் இருந்து வாங்கிய ஒத்த ரூபா பேனாவாக இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ, இந்தியாவுக்கு முதலீட்டுப் படி அளக்கும் பரமனான முதலீட்டாளர்களிடம் இருந்து, பரிசாக வாங்கிய Fulgor Nocturnus (விலை ரூ.56 கோடி) பேனாவால் எழுதத் தொடங்கி இருக்கிறீர்கள். நீங்களே தொழிலாளர்களுக்கு சாதகம் செய்ய நினைத்தாலும், அந்த பேனா... 56 கோடி விலை கொண்ட அந்த வைரப் பேனா ஆகிவிடாது.
நம்பிக்கை
மதிப்பிற்குரிய மோடிஜி, இந்தியர்கள் கடந்த பல தசாப்தங்களில் எந்த அரசியல் கட்சிக்கும் கொடுக்காத பெரிய ஆதரவை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஏதோ ஒரு விஷயத்தில் நீங்கள் நல்லதை செய்வீர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் 100-க்கு 6 பேர் தான் வருமான வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் கூலித் தொழிலாளர்கள் தான். இந்த ஆறு பேரைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டாம். ஆனால் அந்த 94 பேருக்கு உங்கள் அரசு வகுக்கும் புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் தேவை. அப்படி ஒரு சட்டம் இருப்பதைக் கூட அறியாத அந்த 94 இந்தியர்களுக்கு, உங்கள் புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும்.