டெல்லி: அமெரிக்க முன்னுரிமை வர்த்தக சலுகை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியதை அடுத்து பதிலுக்கு இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை (Import Duty) உயர்த்த திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரி உயர்வு அமலுக்கு வரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை முன்னுரிமை வர்த்தக சலுகை பட்டியிலில் இருந்து அமெரிக்கா நீக்கிவிட்டாலும், அதனால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. ஆண்டுக்கு சுமார் 40ஆயரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அதனால் கிடைக்கும் சலுகை என்பது யானைப்பசிக்கு சோளப்பொறியை காண்பிப்பது போல, மிகச்சிறிய அளவேயாகும்.
இறக்குமதி வரி விதிப்பது தொடர்பாக பேச்சவார்த்தைக்கு இந்தியா முதலில் அழைத்ததை பொருட்படுத்தா அமெரிக்கா, பின்னர் சுதாரித்துக்கொண்டு இந்தியாவை திறந்த மனதுடன் அழைத்தபோதும், அந்த அழைப்பை இந்தியா நிராகரித்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 29 பொருட்களுக்கான இறக்குமதி வரியை அடுத்த வாரத்திலிருந்து உயர்த்த முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சிக்கு உதவி
வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு நம்மாளான உதவிகளை செய்யலாமே என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் முன்னுரிமை வர்த்தக நாடுகள் என்ற சலுகையை வைத்து, மற்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை தளர்த்தியது அமெரிக்கா. மிகவும் ஆடம்பர பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே சிறிய அளவில் இறக்குமதி வரியை விதித்தது. இது கடந்த 45 ஆண்டுகளாக நடந்துவரும் வர்த்தக நடைமுறை.
எல்லாருமே ஏமாத்துறாங்களே
இந்த நடைமுறை ஒபாமா இருந்தவரையிலும் சுமூகமாக நடந்து வந்தது. அமெரிக்க அதிபராக நம் அண்ணன் டொனால்ட் ட்ரம்ப் வந்தவுடன் எல்லாமே மாறத் தொடங்கியது. நாம் அளித்து வந்த முன்னுரிமை வர்த்தக சலுகையை நன்றாக அனுபவித்துக்கொண்டு, அதற்கு பதிலாக நாம் ஏற்றுமதி செய்யும் அத்தியாவசியப் பொருட்களுக்கு எல்லாம் அனைத்து நாடுகள் ஒன்று சேர்ந்து இறக்குமதி வரி விதிக்கிறதே என்ற கடுப்பில், பதிலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று உதார் விட்டார்.
இந்தியாவின் பொருமை
ட்ரம்ப் உத்தரவிட்டதால் இந்தியாவும் சீனாவும் பயந்து அலறியடித்துக்கொண்டு வந்து தன் காலடியில் சரணடைந்து மன்னிப்பு கேட்கும் என்று பகல் கனவு கண்டார். மாறாக, இவ்விரு நாடுகளும் ட்ரம்ப்பின் உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வந்தன. இதில் இந்தியா சற்று நிதானப் போக்கை கடைபிடித்து வந்தாலும், அண்டை நாடான சீனாவோ முறுக்கிக்கொண்டு பதிலுக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியது.
சினம் கொண்ட சிங்கம் என்ன செய்யும் தெரியுமா
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த சந்தோசத்தில் இருந்த வேளையில், ட்ரம்ப் இந்தியாவுக்கு அளித்து வந்த முன்னுரிமை வர்த்தக நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தார். கூடவே ஜூன் 5ஆம் தேதிக்கு பின்னர் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். ஆனால், இந்தியா அலட்டிக்கொள்ளாமால், வரி உயர்வு பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தைக்கு தயார் என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இதை ட்ரம்ப் நிராகரித்ததோடு, இனிமேல் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்போம் என்று உதார் காட்டினார். இதையும் இந்தியா கண்டுகொள்ளவில்லை.
இது நாடா இல்லே பேங்க்கா என்ன
இந்தியா மற்றும் சீனாவின் இந்த பிடிவாதாத்தால் வெறுப்பும் விரக்தியும் அடைந்த ட்ரம்ப், அமெரிக்கான்ன என்ன இளிச்சவாய நாடா, வந்தவர்கள் எல்லாம் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போவதற்கு. உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் சொத்துக்களை சுரண்டி கொள்ளையடிப்பதற்கு இதென்ன நாடா இல்லை பொது வங்கியா என்ன? என்று ஏகத்துக்கும் குதித்தார். இருந்தாலும் வேறு வழியில்லாமல் ட்ரம்ப், சற்று சத்தத்தை குறைத்து சமாதானமாக போகலாம் என்று இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
யானைப்பசிக்கு சோளப்பொறிதான்
அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த இந்தியா தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வாதாங்கொட்டை, ஆப்பிள் மற்றும் பாதாம் பருப்பு உள்பட 29 வகையான பொருட்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து இறக்குமதி வரியை உயர்த்தப்போவதாக தடாலடியாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு சலுகையாக 1800 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை பெரிதாக ஒன்றும் பாதிக்காது என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார். இதனையடுத்தே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இது செல்லாது செல்லாது
இந்தியா அறிவித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி உயர்வு பற்றி நன்கு அறிந்த தகவல் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்தியா தற்போது வேண்டுமென்றே இறக்குமதி வரியை உயர்த்தப் பார்க்கிறது. இந்தியாவின் வரி உயர்வு என்பது உலக வர்த்தக அமைப்வு வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ் பொருந்தாது என்றும் இதன் விளைவை இந்தியா சந்திக்க நேரிடும், என்றும் அமெரிக்க எச்சரித்துள்ளதாக கூறுகின்றன.
நாங்கள் நண்பர்கள்தான்
தற்போது அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸூம், இந்தியா தனது வரி உயர்வை கைவிட்டு விட்டு அமெரிக்காவுக்கு கதவை திறந்துவிடவேண்டும் என்றும், அமெரிக்க நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் கூடவே அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்றும், அதுதான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது என்றும் கூறினார். அதோடு நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நண்பனாகவே இருக்க ஆசைப்படுகிறோம். மோடியின் ஆட்சி நிர்வாகத்திற்கு என்றும் உறுதுணையாக நிற்போம் என்றும் கூறினார்.
உணர்வு பூர்வ நடவடிக்கை
அதோடு, இந்தியா தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவால் இந்தியா ஏற்றுமதி செய்யும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு சலுகையை இழக்க நேரிடும் என்றும் இது ஒரு உணர்வு பூர்வமான நடவடிக்கை என்பதால், இதைப்பற்றி மேலும் விவாதிக்கக்கூடாது என்றும் தன்னைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவேண்டாம் என்றும் கூறி விவாதிக்க மறுத்துவிட்டார்.
எங்களுக்கு முன்னுரிமை வேண்டும்
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 120 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்போவதாக இந்தியா அறிவித்தது. ஆனாலும் கூட, அதை அமல்படுத்தாமல் தொடர்ச்சியாக தள்ளிபோட்டுக்கொண்டே வந்தது. இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்த அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை தளர்த்தவேண்டும் என்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
யானையை விரட்டும் சிங்கம்
மதங்கொண்ட யானையான அமெரிக்காவை விரட்ட இந்தியா என்ற சினம் கொண்ட சிங்கம் தயாராகி விட்டது. தற்போது இந்தியா எடுத்துள்ள வரி உயர்வு நடவடிக்கையால் அடுத்து என்ன மாதிரியான எதிர்வினையை ட்ரம்ப் எடுப்பார் என்பது விரைவில் தெரியவரும் என்றும் அதைப்பொருத்தே வர்த்தகப்போருக்கு இடைவேளை விடப்பட்டுள்ளதா அல்லது கிளைமாக்ஸை நெருங்குகிறதா என்பது தெரியவரும்.