டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த கதியிலேயே இருப்பதால், இதனோடு தொடர்புடைய தொழில்துறையிலும் உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் வேலை வாய்ப்பு சதவிகிதத்திலும் எதிரொலித்து வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 33 மாதங்களில் இல்லாத அளவில் 7.91 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் செப்டம்பார் மாதத்தில் தான் வேலையில்லாத் திண்டாட்டம் உச்ச அளவைத் தொட்டது. அதன் பின்னர், மே மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்ட சதவிகிமானது 7.2 சதவிகிதமாக இருந்துள்ளது. அதே போல் கடந்த 2018ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 5.8 சதவிகிதமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். தற்போது லோக்சபா தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதால் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
45ஆண்டுகளில் இல்லாத உச்சம்
கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரத்தை தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) நடத்தியது. அதில் முன் எப்போதும் இல்லாத அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாகவும், கடந்த 45 ஆண்டு கால வரலாற்றில் இதுவே உச்சபட்ச வேலையில்லாத் திண்டாட்டம் என்றும் புட்டு புட்டு வைத்தது.
நாங்க நம்ப மாட்டோம்ல
பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் நம்பகத்தன்மை இல்லை என்றும், ஆண்டு தோறும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரம் வெளியிடும் வழக்கம் அரசுக்கு இல்லை என்றும் மத்திய அரசு மழுப்பலாக பதிலளித்தது. ஆனால் இதை மறுத்த ஆய்வு மையம் மத்திய அரசின் பொருளாதார நிபுணர்களைக் கொண்டு எடுக்கப்படும் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் அதிக நம்பகத்தன்னை உடையது என்று பதிலளித்தது.
ஐய்யய்யோ ஆபத்து
மத்திய அரசின் இந்த மழுப்பலுக்கு அடுத்து வரும் லோக்சபா தேர்தலே காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த வேலையில்லாத்திண்டாட்டம் லோக்சபா தேர்தலில் எதிரொலித்தால் அது ஆளும் கட்சி கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனையை மூடி மறைக்கப் பார்த்தது. ஆனாலும் வேலையில்லாத் திண்டாட்டம் மாதந்தோறும் அதிகரித்துக்கொண்டே வந்தது.
இபிஎஃப் ஜால்ரா
லோக்சபா தேர்தல் ஆரம்பமான ஏப்ரல் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்ட விகிதமானது 7.6 சதவிகிதமாகவும் லோக்சபா தேர்தல் தீவிரமடைந்த மே மாதத்தில் 7.17 சதவிகிதமாகவும் தொடர்ந்து கூடிக்கொண்டே வந்தது. ஆனாலும் இதை மறுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு சதவிகிதம் உயர்ந்து வருகிறது என்று மத்திய அரசுக்கு சான்றிதழ் அளித்தது.
மோடியின் வாக்குறுதி
வேலையில்லாத் திண்டாட்டம் பூதாகரமாவதை உணர்ந்த மோடியும், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தலில் வெற்றி பெற்றால் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். மோடி அளித்த நம்பிக்கையை அடுத்து பெருவாரியான மக்கள் ஆளும் கட்சி கூட்டணிக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற வைத்தனர்.
33 மாதங்களில் இல்லாத உச்சம்
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்திற்கான வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளி விவரத்தை தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் கடந்த நேற்று வெளியிட்டது. அதில் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 33 மாதங்களில் இல்லாத அளவில் 7.91 சதவிகிதமாக கூடிவிட்டதாக ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து மோசமடைந்து வருவதையே இது காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு குறைவு
கடந்த 2016ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தான் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு மோசமான நிலையை எட்டியது. அதற்கடுத்து தற்போது தான் வேலை வாய்ப்பு சதவிகிதமானது 39.42 சதவிகிதமாக குறைந்து வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 7.91 சதவிகிதமாக உயர்ந்துவிட்டதாக பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இதுவே கடந்த 2018ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 5.8 சதவிகிதமாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதிகரிப்பு
கடந்த ஜூன் மாத முதல் வாரத்தில் வேலையில்லாத் திண்டாட்ட விகிதமானது 9 சதவிகிதமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து இரண்டாவது வார இறுதியில் 8.5 சதவிகிதமாகவும், மூன்றாவது வாரத்தில் 7.4 சதவிகிதமாகவும் குறைந்து ஜூன் மாத இறுதி வாக்கில் 7 சதவிகிதமாக குறைந்துள்ளதாக பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.