டெல்லி : டெல்லியில் நீர் வளத்தை மேம்படுத்தவும், நில நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாய நிலத்தை குத்தகைக்கு விடும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.77000 என்ற விகிதத்தில் டெல்லி அரசு வழங்க உள்ளதாம்.
அட ஆமாங்க.. டெல்லியின் வீழ்ச்சியடைந்த நீர்மட்டத்தை காப்பாற்றவும், இயற்கையின் வழியில் தண்ணீரை சேமிக்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாம்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, கடந்த புதன் கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீர் சேமிப்பு திட்டம் தொடர்பான துறைசார்ந்த குழுவின் அறிக்கைக்கு டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாம்.
அதோடு இந்த திட்டத்திற்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.77,000 என்ற விகிதத்தில் குத்தகைக்கு வழங்க மத்திய குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தங்கள் நிலத்திற்கு ஏற்ப தொகை வழங்கப்படும்.
இது குறித்து டெல்லி அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுபோன்ற திட்டம் நாட்டில் முதல் முறையாக, அதுவும் யமுனா நதிப் பகுதியில் இயற்கை வழிகளில் நீர் சேமிக்கப்படும் இந்த திட்டத்தினை, இந்த மாதத்தில் தொடங்க உள்ளதாகவும், குறிப்பாக டெல்லியில் கோடைகாலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை நீக்குவதற்காவே இந்த முக்கியமான திட்டம் இது என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், யமுனா நதியின் சமவெளி பகுதிகளான கீழ் பல்லா மற்றும் வஜிராபாத் பகுதிகளில் நீர் சேகரிப்புக்காக, பெரிய நீர்த்தேக்கங்கள் கட்டப்படும் என்றும், மேலும் நதியின் ஓரங்களில் சிறிய குளங்கள் அமைக்கப்படும் என்றும், மழை காலத்தின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது யமுனாவில் இருந்து வெளியேறும் தண்ணீரை அதில் சேகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாம்.
இந்த திட்டத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டிய தலைவர்களில், அர்விந்த் கெஜ்ரிவாலும் ஒருவர், எனினும் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தேசிய தலை நகரை அபிவிருத்தி செய்ய மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.