டெல்லி, இந்தியா: இன்று மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் நெருக்கமான இயக்கங்களில் RSS-க்கு முக்கிய இடம் உண்டு. இன்று மத்திய அரசில் பெரும் தலைகளாக பல பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களின் தாய் கழகம் இந்த RSS தான்.
இந்த தாய் கழகம், இப்போது வெளிநாட்டுக் கரன்ஸி பத்திரங்களை (Foreign Currency Bond) வெளியிட்டு நிதி திரட்டும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு, பிரதமரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறது RSS.
இந்த Foreign Currency Bond திட்டம் தேசத்துக்கு எதிரானது என்றும், இந்த திட்டத்தினால் நீண்ட காலத்தில் இந்தியாவுக்கு பெரிய ரிஸ்க் இருப்பதாகவும் சொல்கிறது ஆர் எஸ் எஸ்.
Foreign Currency Bond என்றால் என்ன..?
ஒரு நாட்டுக்கு கடன் தேவைப்படுகிறது. அப்போது வெளிநாட்டு கரன்ஸி மதிப்பிலேயே கடன் பத்திரங்களை வெளியிடுவார்கள். திருப்பிச் செலுத்தும் போது வெளிநாட்டு கரன்ஸி மதிப்பிலேயே அசல் + வட்டியுடன் செலுத்த வேண்டும்.
உதாரணம்: இந்தியாவுக்கு ஜனவரி 2020-ல் 7,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. ஆக 100 கோடி டாலர் மதிப்புக்கு திரட்ட விரும்புகிறார்கள். ஒரு டாலர் = 70 ரூபாய் என்பதால் 100 கோடி டாலர் * 70 = 7,000 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த கடனை 2025-க்குள் அடைக்க ஒப்புக் கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.
கடன் வரவு
மேலே சொன்ன உதாரணத்தின் படி, கடனை வாங்கும் போது 100 கோடி டாலர் இந்தியாவுக்குள் வரும். ஜனவரி 2020-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு 70 ரூபாய் என வைத்துக் கொள்வோம். ஆக 100 கோடி டாலரை இந்திய ரூபாயாக மாற்றும் போது 7,000 கோடி ரூபாயாக மாறும். அதோடு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாக கொடுக்க வேண்டி இருக்கும். இந்த வட்டி போக Foreign Currency Bond திட்ட காலம் முடிந்த உடன் அசல் தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கும்.
பற்று பிரச்சனை
இதை 2025-ல் திருப்பிச் செலுத்தும் போது ஒரு டாலருக்கு 85 என வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் 8,500 கோடி ரூபாயைக் கொடுத்தால் தான், வெளிநாட்டுக் காரர்கள் கொடுத்த 100 கோடி டாலரை விலை கொடுத்த வாங்க முடியும். இப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ந்தால் அது இந்தியாவுக்கு கூடுதல் நிதி நெருக்கடி ஆகி விடும். இது தான் இந்த கடனில் உள்ள மிகப் பெரிய ஆபத்து. இதனால் தான் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தொடங்கி ரகுராம் ராஜன் வரை இந்த Foreign Currency Bond திட்டத்தை வேண்டாம் என்கிறார்கள். சரி இந்த Foreign Currency Bond திட்டத்தைப் பற்றி ஆர் எஸ் எஸ் அமைப்பினர்கள் என்ன சொல்கிறார்கள்..?
ஆர் எஸ் எஸ் அமைப்பு
"எங்களால் இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது. மத்திய அரசு தன் Foreign Currency Bond திட்டத்தை விரைவில் பின்வாங்கிக் கொள்ளும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவான ஸ்வதேஷி ஜாக்ரன் மன்ச் அமைப்பின் துணை பொறுப்பாளர் அஸ்வனி மஹஜன் சொல்லி இருக்கிறார். அதோடு நல்ல பொருளாதார வல்லுநர்களை வைத்து இந்த Foreign Currency Bond திட்டத்துக்கு எதிராக கூட்டங்களில் பேச இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் அஸ்வினி.
பயன் இல்லை
அதோடு "அர்ஜெண்டினா, துருக்கி போன்ற நாடுகள் தன் நிதிப் பற்றாக் குறையை சமாளிக்க Foreign Currency Bond-களை, சர்வதேச சந்தைகளில் வெளியிட்டு நிதி திரட்டினார்கள் ஆனால் எந்த நல்லதும் நடக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நாம் Foreign Currency Bond-களை வெளியிட்டால் மேற் கொண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வேகமாக சரியத் தான் செய்யும்" எனவும் சொல்லி இருக்கிறார். இன்னும் இந்தியா தீர்மானமாக Foreign Currency Bond வெளியிடுவது பற்றிப் பேசவில்லை அதற்குள், இந்தியாவின் முதல் தவணை Foreign Currency Bond-களை லண்டனில் வைத்து வெளியிட வேண்டும் என மறைமுகமாக அழைப்பு விடுத்திருக்கிறார் பிரிட்டன் பிரதமர் தெரஸா மே.
அரசு தரப்பு கருத்து
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர வட்டி விகிதங்கள் குறைய வேண்டும் அதற்குத் தான் Foreign Currency Bond-களை வெளியிடுகிறோம் என்கிறார் மத்திய பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க். அதோடு மத்திய அரசுக்கு அந்நிய நேரடி முதலீடுகளையும், வெளிநாட்டவர்களின் சேமிப்புகளையும் இந்தியாவுக்கு வரவேற்கிறது. அது தான் இப்போதைய தேவை எனவும் சொல்லி இருக்கிறார். கடந்த கால ஆட்சியில் அருண் ஜெய்ட்லி அரசுக் கடன் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் "இந்தியாவின் பெரும்பாலான கடன்கள் உள்நாட்டுக் கடன்களே ஆகையால், கரன்ஸி மதிப்புப் பிரச்னை இல்லாமல் இருக்கிறது" என எழுதி இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
ரகுராம் ராஜன்
இந்தியாவின் வங்கிகளை நிர்வகிக்கும் ஆர்பிஐ அமைப்பின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனும் Foreign Currency Bond திட்டத்தை விமர்சித்திருக்கிறார். இன்று இந்தியா நல்ல நிலையில் இருக்கும் போது நம்மிடம் முதலீடு செய்வதும், நமக்கான மவுஸ் குறையும் போது நம்மை விட்டு வேறு இடத்தில் முதலீடு செய்யும் குறுகிய கால முலீட்டாளர்களைப் பற்றியும் இந்திய அரசு சிந்திக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.
பாஜக தரப்பு
பாஜகவின் பொருளாதார விவகாரத் துறை பேச்சாளர் கோபால் கிருஷ்ண அகர்வால் "இந்தியாவுக்கு மிகப் பெரிய முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. தற்போது இருக்கும் முதலீட்டுத் திட்டங்களிலேயே இந்த Foreign Currency Bond திட்டத்தில் சில ரிஸ்குகள் இருந்தாலும், இது தான் சிறந்த திட்டமாக இருக்கிறது. அரசின் நோக்கப்படி குறைந்த வட்டிக்கு பணம் திரட்டுவது உள் நாட்டில் மிகவும் சிரமமான விஷயமாக இருக்கிறது" எனப் பேசி இருக்கிறார். அதே நேரத்தில், வெளிநாட்டு கரன்சி கடன் பத்திரங்களால், அரசு தன் நிதிப் பற்றாக்குறையான 3.3%-த்தை தாண்டி விடாமல் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்திருக்கிறார்.
3.2% வட்டி
இத்தனை எச்சரிக்கைகள், எதிர்ப்புகள், கோரிக்கைகளை எல்லாம் மீறி, மத்திய அரசு Foreign Currency Bond-களை வெளியிட்டு, நிதியைத் திரட்டுவதாக இருந்தால் சுமார் 3.2 சதவிகித வட்டிக்கு இந்தியா தனக்கு தேவையான கடன்களைத் திரட்டலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள். இந்தியாவின் கடன் பத்திரங்களுக்கு BBB ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று வர்த்தக நேர முடிவில் இந்தியாவின் 10 ஆண்டுகால கடன் பத்திரங்கள் 6.33 சதவிகித வட்டிக்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது.