டெல்லி : இந்தியாவில் நாடுமுழுவதும் ஒரே சீரான வரியை கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ஆனால் இந்த ஜி.எஸ்.டி. வரியில் இன்று வரை பல்வேறு குளறுபடிகளும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும் விதிக்கப்படுவதாகவும் கருத்துகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி ரீபண்டு குறித்தான பிரச்சனைகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் தீர்வு கொடுக்கும் வகையில், இன்று பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி ரீபண்ட் தொகை, 30 நாட்களுக்கு திரும்ப செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வருமானவரித்துறை, சுங்கத்துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜி.எஸ்.டி.) அதிகாரிகளுடன் சென்னையில், அடுத்த ஞாயிறுகிழமையன்று ( செப்டம்பர் 1ம் தேதி) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி பொறுப்பை ஏற்றத்திலிருந்தே, இத்துறையை மேம்படுத்த அதிரடி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த வகையில் தற்போது ஒவ்வொரு மாநிலமாக சென்று வருமானவரித்துறை, சுங்கவரித்துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) துறையில் உள்ள உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியும் வருகிறார்.
இந்த சந்திப்பின் போது, துறை மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கி வருவதோடு, நிதித்துறை மீது போடப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பது, வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையில் முகாம்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறாராம். இது தவிர இத்துறை சார்ந்த மேம்பாட்டுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் ஜி.எஸ்.டியில் விரைவில் ஏற்க தக்க நல்ல மாற்றங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் மேலும் கூட்டத்தில் இன்னும் பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.