இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த 25 வருடத்தில் எதிர் கொள்ளாத மோசமான நிலைமையைத் தற்போது எட்டியுள்ளது. 25 வருடத்தில் மோசமான 5 வருட வர்த்தகச் சூழ்நிலையை 2013-14 முதல் 2017-18 வரையிலான காலத்தில் சந்தித்து இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் விற்பனை எண்ணிக்கை அதிகரித்தாலும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தின் அளவு ஏனோ குறைவாகவே இருந்துள்ளது. இது தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் என பாகுபாடு இல்லாமல் அனைத்து தப்பு ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.
இந்திய பொருளாதாரம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையை முழுமையாக விசாரித்த போது பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கும் விற்பனை அளவுகள்.
2017-18 ஆண்டு வரையில் முடிந்து 5 வருட காலத்தில் நாட்டின் மொத்த விற்பனை வருவாய் 6 சதவீதம் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது. இது கடந்த 1993-94 வரையிலான காலம் முதல் ஒப்பிடுகையில் மோசமான 5 வருடமாக அமைந்து இருக்கிறது.
இதே போல் 2002-03 முதல் 2007-08 வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த கார்ப்பரேட் விற்பனையின் அளவு 21.2 சதவீதம் வரையில் உயர்ந்து இருக்கிறது. ஆனால் இந்த 2017-18 வரையில் முடிந்த கடைசி 5 வருட காலத்தில் அரசு நிறுவனங்களின் விற்பனை அளவு வெறும் 2.6 சதவீதம் தான் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் பின் உள்நாட்டு நிறுவனங்களின் விற்பனை அளவு 6.5 சதவீதமும், வெளிநாட்டு நிறுவனங்களின் விற்பனை அளவு 13.6 சதவீதமாக உயர்ந்து உள்ளது என அரசு தரவுகள் கூறுகிறது.
இந்த ஆய்வின் மூலம் நமக்குத் தெரிய வருவது என்ன என்றால் 2017-18ஆம் ஆண்டு வரையில் முடிந்த 5 வருட காலத்தில் நாட்டின் மொத்த விற்பனையின் சராசரி அளவு வெறும் 6 சதவீதம் தான். இது இந்தியா தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயக் கொள்கைகள் வந்த பின் ஏற்பட்ட மிகவும் மோசமான வளர்ச்சி என்பது தான் கவலைக்குரிய விஷயமாக நம் முன் நிற்கிறது. அரசு தான் எதையாவது செய்து இந்த பிரச்னைகளைச் சரி செய்ய வேண்டும்.