மொபைல் தயாரிப்பில் வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருந்த வேளையில் இந்தியாவிலேயே சொந்தமாக மொபைல் தயாரிப்பை துவங்கி மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்போது அதனுடைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் நிறுவனரும், தமிழ் திரைப்பட நடிகை அசின் அவர்களின் கணவருமான ராகுல் சர்மா சோகத்தில் மூழ்கியுள்ளார்.
ஏன் இந்தத் திடீர் சரிவு..?
சீனா ஆதிக்கம்
சீன நிறுவனங்களின் மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் வருகையால் இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் படிப்படியாகத் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் வர்த்தகத்தை மீட்டு எடுக்க என்ன செய்வது எனத் தெரியாமல் குழும்பி நின்றது மைக்ரோமேக்ஸ்.
எதிரொலிகள்
இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தின் வர்த்தகம் குறைந்து, லாபம், வருவாய் ஆகியவையும் குறையத் துவங்கியது. இதன் காரணமாகக் கடந்த 4 வருடத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 21,000 கோடி ரூபாயில் இருந்து 1357 கோடி ரூபாய் வரையில் சுமார் 93 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
இவை அனைத்தும் இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் வெளியேற்றத்திற்குப் பின் நடந்தது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்கள் வெளியேற்றம்
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த தனியார் பங்கு முதலீட்டாளர்களான டிஏ அசோசியேட்ஸ் மற்றும் சான்ட்ஸ்டோன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 6.9 சதவீத பங்குகளைத் திரும்ப மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடமே 93.65 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிய துவங்கியது.
பங்குகள்
தற்போதைய நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான ராகுல் சர்மா, விகாஸ் ஜெயின், சுமீத் குமார் மற்றும் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் தலா 19.57 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
வருவாய் மற்றும் லாபம்
2000ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வருவாய் 2014-15இல் 11,041 கோடி ரூபாயில் இருந்து 2017-18இல் வெறும் 4,345 கோடி ரூபாயாகக் குறைந்தது. இதேபோல் லாப அளவீடுகள் 3,362 கோடி ரூபாயில் இருந்து 97 சதவீதம் குறைந்து 103 கோடி ரூபாயாகக் குறைந்தது.