சென்னை : கிட்டதட்ட 80 வருடங்களுக்கும் மேலாக தனது அபாரமான சுவையால் அனைவரையும் ஈர்க்கக் கூடிய, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதற்கு முன்னதாக தமிழகத்தில் பல பொருட்களுக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. குறிப்பாக ஈரோடு மஞ்சள், ஊத்துக்குளி வெண்ணெய், மணப்பாறை முறுக்கு என பல பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதற்கு காரணம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைக்கும் பால்கோவா இயற்கையிலேயே ருசியாகவும், திகட்டாமலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் வரலாறு
கடந்த 1940ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த பால்கோவாவானது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியின், முக்கிய குடிசை தொழில் என்றே கூறலாம். ஆரம்ப காலத்தில் அளவுக்குகதிமான பால் உற்பத்தியால், தேங்கிய பாலை பதப்படுத்த முடியாத நிலையில், அவற்றை உணவாக மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனராம் இவ்வூர் மக்கள். ஆக அப்படி எஞ்சிய பாலில் உருவானதே, இந்த ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா என்றும் கூறுகிறார்கள். ஆனால் பின்னாளில் இது மக்களிடையே மிக பிரபலமாகவே, இதையே முக்கிய தொழிலாக மாற்றியுள்ளனர் இம்மக்கள்.
இன்னும் என்ன சிறப்பு?
ஆரம்ப காலத்தில் வெறும் பால்கோவா மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பால் அல்வா, பால் பேடா, பால் கேக், கேரட் பால்கோவா மற்றும் பியூர் கோவா என பலவகையில் தயாரிக்கப்படுகிறது. இப்படி பல பால் சார்ந்த உணவுப் பொருட்கள் தயாரித்து வந்தாலும், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா தான் உலகம் முமுவதும் மிகப் பிரபலம் என்றும் கூறுகிறார்கள் இங்குள்ள மக்கள். இதற்கு காரணம் இங்கு சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் பால்கோவா என்றும் கூறப்படுகிறது.
சிறப்பு என்ன?
இங்கு தயாரிக்கப்படும் பால்கோவாக்கள் இயற்கையிலேயே ருசியானது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள சுற்றுசூழலும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள கால நிலையால், விளையும் பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்றும், இதனால் இதை உண்ணும் கறவை மாடுகள் கறக்கும் பாலே தனித்துவமானது என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மாடுகளின் தரமான மேய்ச்சல் தான், இந்த பால்கோவாவுக்கு மேலும் அதிக சுவையை கொடுக்கிறது என்றும், இதனால் இங்கு தயாரிக்கப்படும் பால்கோவா தயாரிப்பின் போது குறைந்த அளவான சர்க்கரையே சேர்க்கப்படுகிறது. இது தான் இதன் தனிச் சிறப்பு என்றும் கூறப்படுகிறது.
பால்கோவாவிற்கு தனி அங்கீகாரம்
அரசின் இந்த புவிசார் குறியீடினால் இனி ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் மதிப்பும் மேலும் உயர்வதோடு, விற்பனையும் அதிகரிக்கும். இதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு பகுதிகளை சேர்ந்த யாரும் கூறி, இனி விற்பனை செய்யவும் முடியாது, அதோடு சர்வதேச அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனை அதிகரித்து மேலும் தனி அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.