டெல்லி : கடுமையான புதிய மோட்டார் வாகன சட்டத்தால் பல நன்மைகள் இருந்தாலும், ஒரு புறம் கடுமையான அபராதம் என்பது கடுமையான விமர்ச்சித்தலுக்கு உள்ளானது.
இதனால் இந்த புதிய விதிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, ஒரு வழியாக அந்த மாநில அரசு புதிய அபராத தொகையினை விதித்துள்ளது.
அதோடு இந்த புதிய அபராத தொகையானது வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
குஜராத்தில் இவ்வளவு தான் அபராதம்
இதன் படி வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு மத்திய அரசு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதை குஜராத் அரசு 500 ரூபாயாகக் குறைத்துள்ளது. இதுவே ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் என்ற நிலையில், அதை 1000 ரூபாயாக குஜராத் மாநில அரசு குறைத்துள்ளது.
அபராதம் குறைந்தது
அதேபோல இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் 1000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை குஜராத் அரசு 100 ரூபாயாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காற்று மாசு கட்டுப்பாட்டுக்கான சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கான மத்திய அரசின் அபராதத் தொகையான 10,000 ரூபாயை, 3000 ரூபாயாகக் குறைத்துள்ளது குஜராத் அரசு.
இதற்கெல்லாம் அபராதம் குறைக்க முடியாது
எனினும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சிறு வயதில் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் செல்வது ஆகியவற்றுக்கான அபராத தொகையினை மாநில அரசு மாற்ற முடியாது என்றும் குஜராத் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆனால் புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின் படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாயும், ஓட்டுனர் உரிமம் ரத்து பின்னரும் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதமும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு 5,000 ரூபாயும் என அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்
இந்த நிலையிலேயே பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையிலேயே குஜராத் மாநிலத்தில் இந்த அபாரதம் குறைக்கப்பட்ட நிலையில், மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராத தொகையினை குறைப்பது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் என கூறியுள்ளார்.