பெங்களுரு: அஸிம் பிரேம்ஜி மற்றும் அதன் குழும நிறுவனங்கள், விப்ரோ நிறுவனத்திடம் 7,300 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விப்ரோ கடந்த மாதமே தனது பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே இந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக நிறுவனங்கள் அதன் பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை வாங்குவது ஒரு வழக்கமான செயல்தான், சந்தையில் இருக்கும் மதிப்பை விட கொஞ்சம் அதிகரித்து, பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை வாங்கும் என்றும், இந்த நிலையிலே அஸிம் பிரேம்ஜி மற்றும் அதன் குழும நிறுவனங்கள் 22.46 கோடி பங்குகளையும், இதே எல்.ஐ.சி 1.34 கோடி பங்குகளையும் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திரும்ப வாங்குதல் திட்டத்தின் படி, ஒரு பங்கின் விலையானது, 325 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே மொத்தம் 10,500 கோடி ரூபாய் மதிப்பிலான 32.3 கோடி பங்குகளை விப்ரோ நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது கவனிக்கதக்கது.
இதில் குறிப்பாக அஸிம் பிரேம்ஜி தன்னிடமுள்ள 1.22 கோடி பங்குகளையும், அஸிம் பிரேம்ஜியின் டிரஸ்டிடமிருந்து 4.05 கோடி பங்குகளும் திரும்ப வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 74.05 சதவிகித பங்குகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய பணக்காரரான அஸிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தின் தனக்குள்ள பங்கினை 34 சதவிகிதம் பங்கினை அறக்கட்டளைக்கு அளித்துள்ளார். அதிலும் கடந்த மார்ச் மாதத்தில் விப்ரோ பங்குகளின் மூலம் கிடைத்த அனைத்து வருமானத்தையும், அறக்கட்டளைக்கே பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த அறக்கட்டளையின் மதிப்பு 1.45 லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை பல மாநிலங்களில் உள்ள பொதுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆரம்ப நிலைக் கல்வியை அளிப்பதற்காக 2001ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் பிரேம்ஜி அறக்கட்டளை, இவரது அறக்கட்டளை மூலம் தெருவோர குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் என பலரும் பலனடைந்துள்ளனர். மேலும் இந்த அறக்கட்டளை பெங்களூருவில் ஒரு பல்கலைக் கழகத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த பங்கு விற்பனையின் மூலம் கிடைத்த தொகையினை, அஸிம் பிரேம்ஜி தனது அறக்கட்டளைக்காக ஒதுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.