இந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இருக்கும் பல தரப்பட்ட உள் நாட்டு நிறுவனங்களுக்கு செஸ் உட்பட மொத்த கார்ப்பரேட் வரிச் சுமையை 25.17 சதவிகிதமாக குறைத்து இருப்பதை இன்று காலை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதற்கு முன் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச் சுமை 30 சதவிகிதம் + சர் சார்ஜ் மற்றும் செஸ் போன்ற கூடுதல் வரிச் சுமை உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னும் சந்தோஷப்பட வேண்டிய விஷயமாக, இந்த புதிய 25.17 % வரி விகிதம் 2019 - 20 நிதி ஆண்டிலேயே ஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வந்து விடுகிறது என்பதையும் அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவில் இருக்கும் உள் நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கும் இந்த சலுகையால், மத்திய அரசுக்கு சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயை இழக்க வேண்டி இருக்கும். ஏற்கனவே இந்திய அரசின் நிதி நிலை பிரச்னை அதிகமாக இருக்கும் காலத்தில் சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் இந்தியாவில் முதலீடுகளை பெருக்குவதற்கும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குமே இந்த அதிரடி நடவடிக்கைகளைச் செய்வதாகச் சொன்னார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த முடிவுகளை இன்று காலையில் இருந்து பிரதமர் தொடங்கி பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், நிதி அமைச்சருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் தற்போது மத்திய சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் புகழ்ந்து இருக்கிறார். நிதின் கட்கரியும் மோடியைப் போல இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனச் சொல்லி இருக்கிறார்.
இதனால் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அதே போல இந்தியாவில் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும். இதனால் சிறு குறு தொழில் முனைவோர்கள் மேம்படுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார் நிதின் கட்கரி. இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர இது போன்ற முடிவுகள் அவசியம் எனவும் சொல்லி இருக்கிறார்.