டெல்லி : ஸ்டீலை மூலதனமாக கொண்டுள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சரிவை கண்டுள்ள நிலையில், ஸ்டீல் துறையும் சரிவை கண்டுள்ளது என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், ஸ்டீல் துறையில் எந்தவொரு பெரிய மந்தநிலையும் இல்லை என்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (செயில்) நிறுவனத்தின் தலைவர் அனில் குமார் சவுத்ரி கூறியுள்ளார்.
பொதுத்துறையை சேர்ந்த செயில் நிறுவனம் கடந்த 1954ல் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நிறுவனமாகும். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைக் கொண்டது இந்த நிறுவனம்.
ஆக இந்த நிறுவனத்தின் தலைவர் அனில் குமார் சவுத்ரி ஸ்டீல் துறையில் எந்தவொரு பெரிய மந்த நிலையும் இல்லை என்றும், மேலும் லாபத்தை அதிகரிக்க இந்த நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் என்று அனில் குமார் சவுத்ரி கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றும் வகையில், கடந்த வாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதிலும் குறிப்பாக இது ஸ்டீல் துறைக்கு சாதகமாக இருக்க உதவும் என்றும் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதம் கூடுதல் வரிகளுடன் சேர்த்து, 25.07% என்றும், இதே புதிய நிறுவனங்களுக்கு 17.01%ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆக இந்த வரி விகிதத்தினை ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனில் குமார் கூறியுள்ளார்.
இந்த வரி குறைப்பானது அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் வருவாய் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் உற்பத்தி ஒரு நிறுவனத்தில் செய்யப்படுகிறது எனில், புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் உதிரி பாகங்கள், நுகர்பொருட்கள் என தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நிறுவனங்கள் பயன் அடையலாம். இதில் எந்த சட்டவிரோத செயலும் இல்லை, மாறாக இதை உங்களுக்கு சாதமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனில் குமார் கூறியுள்ளார்.