மும்பை: ஒரு புறம் நாட்டில் பொருளாதார மந்த நிலை என நிலவி வந்தாலும், மறுபுறம், இவங்க காட்டில் எப்போதும் பண மழைதான். அதிலும் தொடர்ந்து 12 முறையாக உலகப்பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானிக்கு இது மிகப்பெரிய விஷயமே அல்ல என்றாலும், உலகமே பொருளாதாரமே மந்த நிலையால் தத்தளித்து வரும் நிலையில், இது பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு விஷயமாகவே கருதப்பட்டது.
இந்த நிலையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 18% அதன் நிகரலாபம் அதிகரித்து, 11,262 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டின் இதே காலாண்டில் 9,516 கோடி ரூபாயாக இதன் நிகரலாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் எப்படி?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ள நிலையில், இதன் வருவாய் 4.8 சதவிகிதம் அதிகரித்து 1.64 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1.56 டிரில்லியன் ரூபாயாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சில்லறை வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் தான் களைகட்டியுள்ளதாகவும், முறையே வருவாய் 27% மற்றும் 43% அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
முந்தைய மதிப்பீடு
ஃபுளும்பெர்க் நிறுவனம் இந்த நிறுவனத்தின் இலாபம் 11,256 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும், இதனை 10 வல்லுனர்கள் கொண்ட குழு மதிப்பிட்டிருந்தனர் என்றும், அதே போல வருவாய் 1.51 டிரில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படும் நிலையில், இவர்களின் மதிப்பீட்டுக்கு மேலே லாபமும் வருவாயும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இந்த நிறுவனத்தின் மொத்த சுத்திகரிப்பு விளிம்பு, ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெயும் எரிபொருளாக மாற்றுவதில் பேரலுக்கு 9.4 டாலராக கிடைத்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
களை கட்டிய சில்லறை வர்த்தகம்
ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் வருவாய் கடந்த செப்டம்பர் காலாண்டில் 27% அதிகரித்து, 41,202 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 32,436 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் 337 புதிய ஸ்டோர்களை திறந்துள்ளதாகவும், மொத்த ஸ்டோர்களின் எண்ணிக்கை 10,901 ஆகவும் உள்ளதாகவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜியோ எப்படி?
அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளிய ஜியோ, தற்போது சற்று சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், கடந்த மார்ச் காலாண்டில் 990 கோடி ரூபாய் நிகர லாபத்தையும், 12,354 கோடி ரூபாய் வருவாயையும் கொண்டுள்ளது. இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் 355.2 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நிபுணர்கள் எதிர்ப்பார்த்ததை விட வருவாய் 7% குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்ன சொல்கிறது பெட்ரோ கெமிக்கல்ஸ்
இந்த நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவில் 38,538 கோடி ரூபாய் வருவாய் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவின் மொத்த கேஸ் எரிபொருள் திறனில் 60 - 70% அளவுக்கு சப்ளை செய்யும் திறன் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு இது பொன்னான காலம் என்றே கூறப்படுகிறது.
இப்படித்தான் பங்கு விலை உள்ளது?
கடந்த 2018, ஆகஸ்டில் இருந்தே இந்த நிறுவனத்தின் மார்கெட் கேப்பிட்டலைசேஷன் எனும் சந்தை மதிப்பு 8 லட்சம் கோடியை தாண்டிய நிலையில், தற்போது இந்த நிறுவனத்தின் மொத்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் முதல் முறையாக 9 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 1.42% அதிகரித்து 1415 ஆக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.