சென்னை : நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் கண்டிப்பாக திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. ஏனெனில் பிரியாணியின் ருசியாலும் மணத்தாலும் அனைவரையும் சுண்டி இழுக்கும் அளவுக்கு திறன் படைத்தது.
தமிழ் நாட்டில் பிரியாணி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி தான். இதன் உண்மையான பெயர் தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் என்பதாகும். அதுவும் குறிப்பாக திண்டுக்கல் தலப்பாகட்டி நாயுடு பிரியாணி என்று செல்லமாகவும் இது அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணி உணவக்கத்திற்கு அவ்வூர் மக்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டு அசைவ பிரியர்கள் அடிமை என்றால் அது மிகையில்லை.
ஆனால் தற்போது இந்த பிரியாணியை தமிழ்நாட்டு மக்கள் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி என்ன வாய்ப்பு என்ன என்று கேட்கிறீர்களா? அதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
திண்டுக்கல் தலப்பாகட்டியின் வரலாறு என்ன?
இந்த ருசி ருசியான பிரியாணியை சாப்பிட மட்டும் தான் தெரியும். இதன் வராலாறு தெரியாது என்று கூறுகிறீர்களா? கடந்த 1957ம் ஆண்டு நாகசாமி நாயுடு திண்டுக்கல்லில் ஆனந்த விலாஸ் பிரியாணி என்று உணவகத்தை ஆரம்பித்தார். சரி எப்படி தலப்பாகட்டியானது என்று கேட்கிறீர்களா? நாகசாமி நாயுடு எப்போதும் தலையில் தலைப்பாகை கட்டியிருந்ததால் வாடிக்கையாளர்கள். தலப்பாகட்டி என்றுதான் கூப்பிடுவார்களாம், பின்னாளில் இது தலப்பாகட்டி பிரியாணி கடை என்றும் பாசமாக கூப்பிட்டனராம். இந்த நிலையில் 1978ம் ஆண்டு அவரின் மறைவுக்கு பின்னர் அவரின் நினைவாகவே தலப்பாகட்டி ஆனந்த விலாஸ் பிரியாணி என்று பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
தலப்பாகட்டிக்கு மவுசு
எனினும் கடந்த 2010ம் ஆண்டிலேயே டிரேடு மார்க் பதிவகம் தலப்பாக்கட்டி என்ற இப்பெயரை தலப்பாகட்டி ஆனந்த விலாஸூக்கு அளித்தது. இதே இதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சென்னை ராவுத்தரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தலாப்பாகட்டி பிரியாணிக்கு மட்டும் அல்ல. தலப்பாகட்டி பிரியாணி என்ற பேருக்கும் மவுசுதான்.
எத்தனை கிளைகள்
இந்த மணம் பரப்பும் பிரியாணி உணவகம் மொத்தம் 64 இடங்களில் உள்ளது என்றும், இதில் 7 வெளி நாடுகளில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக்கத்தில் திண்டுக்கல், பழனி, தாராபுரம், சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூரு, கோயமுத்தூர், கரூர், ஒட்டன்சத்திரம், காஞ்சிபுரம், ஆம்பூர், நாமக்கல், நாகர்கோவில், தேனி, விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களிலும், இது தவிர பாண்டிச்சேரி, பிரான்ஸ், ஸ்ரீலங்கா, மலேசியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் என பல இடங்களிலும் பல நாடுகளிலும் காணப்படுகிறது.
தலப்பாகட்டியில் முதலீடு
இந்த பிரியாணி உணவகம் உலக நாடுகள் சிலவற்றில் இருந்தாலும் கூட, வட மாநிலங்களில் இதுவரை எந்த கிளைகளையும் அமைக்கவில்லை என்பதே உண்மை, இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த சி.எக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம், திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகத்தில் 260 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் இந்த உணவகம், இனி இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக முழுதும் விரிவாக்கம்
இந்த ஒப்பந்தத்தை பற்றி நன்கு அறிந்த வட்டாரங்களில், இத்திட்டத்தின் படி, முதல் கட்டமாக இந்த உணவகம் கேரளா கர்நாடாகா மற்றும் ஆந்திராவில் தனது இருப்பை வலுப்படுத்தும் என்றும், இராண்டாவது கட்டமாக வட மாநிலங்களில் இந்த விரிவாக்கம் நடக்கும் என்றும், இதற்கு அடுத்தடுத்த விரிவாக்கங்கள் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் இருக்கும் என்றும், இதே நேரம் உலக சந்தைகளிலும் இதன் கிளைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரியாணி உற்பத்தி
குறிப்பாக தமிழகத்தில் 300 பிரியாணி பிராண்டுகள் உள்ளன என்றும், இவை சராசரியாக மாதம் 25 லட்சம் ரூபாய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு முறைசார்ந்த வர்த்தகத்தின் படி 1,500 கோடி ரூபாயும், இதே முறைசாரா வர்த்தகத்தில் படி 4,000 கோடி ரூபாய் வருவாயும் பெறப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியின் 30 கிளைகள் மூலம் தினசரி 4000 கிலோ பிரியாணி தயாரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீரக சம்பாவில் பிரியாணி
நாடெங்கிலும் அனைவராலும் போற்றப்படும் இந்த பிரியாணியின் சிறப்பே "பறக்கும் சித்து எனப்படும் சீரக சம்பா" அரிசியினால் செய்யப்படுவது தான் என்றும், இதற்காக தேவைப்படும் இறைச்சிகள் கன்னிவாடி மற்றும் பரமத்தி கால்நடை சந்தைகளில் இருந்து வாங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதன் தற்போதைய நிர்வாகி சதிஷ் தினசரி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பார் என்றும், மேலும் முக்கிய முடிவெடுப்பதிலும் இவர் பங்கு வகிப்பார் என்றும் கூறப்படுகிறது.