முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆக இருக்கும் கௌதம் அதானி தனது அதானி எண்டர்பிரைசர்ஸ் கீழ் புதிதாக MPL அதாவது முந்த்ரா பெட்ரோகெம் லிமிடெட் என்ற கிளை நிறுவனத்தை உருவாக்கிப் பதிவு செய்துள்ளது.
அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் முந்த்ரா பெட்ரோகெம் லிமிடெட் என்ற கிளை நிறுவனத்தைப் புதிதாக உருவாக்கி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை தலைமையாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வாயிலாக எவ்விதமான வர்த்தகத்தையும் இதுவரை துவங்கவில்லை என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சரி இந்தப் புதிய நிறுவனம் எந்தத் துறையில் பணியாற்ற உள்ளது..? எந்த வகையிலான வர்த்தகத்தைத் துவங்க உள்ளது..?
Mundra Petrochem Ltd நிறுவனம் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் கெமிக்கல் ஆலைகள் அடிப்படையிலான feedstocks அமைக்க உள்ளது. இதன் மூலம் நிலக்கரி, பெட்கோக், கோக், லைம்ஸ்டோன், சால்ட், மணல், தார், ஆயில், எல்பிஜி, எல்என்ஜி, ஈதேன், கிரீன் எரிபொருள் என அனைத்தையும் விநியோகம் செய்ய உள்ளது.
இதன் மூலம் நிலம் கையகப்படுத்தல், டிசைன், இன்ஜினியரிங், கட்டுமானம், பவர் மற்றும் இன்பராஸ்டக்சர், விற்பனை, கொள்முதல், வர்த்தகம் என அனைத்துப் பிரிவுகளில் இருக்கும் வர்த்தகத்தையும் MPL நிறுவனத்தின் வாயிலாகப் பெற உள்ளது.
அதானி குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக MPL இருக்கும் காரணத்தால் இதன் மதிப்பு சற்று அதிகமாகவே இருக்கும். மேலும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் தொடர்ந்து புதிய பிரிவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிதாக ஒரு வர்த்தகப் பிரிவைத் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனப் பங்குகள் 1.17 சதவீத வளர்ச்சி அடைந்து 1,156.15 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது.