அதானி குழுமம், இந்தியாவின் பழமையான விமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த 462 கோடி ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த ஆஃபர் ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்திற்குத் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் கைப்பற்றும் உறுதியாகும். மேலும் இந்த விலை குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி இத்தொகையை உயர்த்தும், குறைக்கவும் முடியும்.
அதானி குழுமத்தின் அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு குழு ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கான விவாதங்களை நடத்தி வருகிறது.
ஏர் ஒர்க்ஸ் நிறுவனம்
ஏர் ஒர்க்ஸ் நிறுவனம் 1951 ஆம் ஆண்டு ரவி மேனனின் குடும்பத்தால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் பங்குதாரர்களின் நான்கு முக்கியக் குழுக்களைக் கொண்டுள்ளது-மேனன் குடும்பம், பஞ்ச் லாயிட் ஏவியேஷன், ஜிடிஐ கேபிடல் மற்றும் ஒரு ஊழியர் நல அறக்கட்டளை இணைந்து 100% பங்குகளை வைத்திருக்கின்றன.
வர்த்தகக் கைப்பற்றல்
ஏர் வொர்க்ஸ் 2010 ஆம் ஆண்டில் ஏர்பஸின் உற்பத்தித் தளத்திற்கு அருகில் இருக்கும் ஏர் லிவரி நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்கை 2010 இல் வாங்கியது. மேலும் ஏரோ டெக்னிக் எஸ்பேஸை 2013 இல் வாங்கியதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தின் பிரான்சின் Toulouse பகுதியில் உள்ள அதன் விமானப் பெயிண்டிங் வசதியை கைப்பற்றியது.
வருவாய்
ஏர் ஒர்க்ஸ் நிறுவனம் மார்ச் 2021 இல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.253 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது, மேலும் இந்த வருவாய் மார்ச் 2020 இல் முடிவடைந்த நிதியாண்டில் ஒப்பிடுகையில் 20% குறைந்துள்ளது.
கடன்
ஏர் ஒர்க்ஸ் நிறுவனம் மொத்தம் ரூ.100 கோடி கடன் பெற்றுள்ளது. இந்தியாவில் விமானங்களைச் சேவை செய்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏர்பஸ் நிறுவனத்துடன் சமீபத்தில் $120 மில்லியன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது இந்த ஒப்பந்தத்தின் கீழ் விஸ்தாரா நிறுவனத்தின் மொத்த விமானங்களையும் சர்வீஸ் செய்து வருகிறது.
அதானி குழுமம்
அதானி குழுமம் ஏற்கனவே இந்தியாவில் அதிகளவிலான விமான நிலையங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் விமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வர்த்தகத்தில் நுழைய உள்ளது. மேலும் ஆதானி குழுமம் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இறங்கவும் திட்டமிட்டு வருகிறது.