இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் துறைமுகச் சரக்குக் கையாளுதலில் நாட்டின் பெரும் பணக்காரராக விளங்கும் கௌதம் அதானியில் அதானி குழுமம் பெரிய பங்கு வகிக்கும் நிலையில், இந்நிறுவனம் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு அதானி குழுமம் தமிழ்நாட்டில் திவாலான காரைக்கால் துறைமுகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியான நிலையில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதியில் சேவையை அதிகரிக்க முக்கியமான ஒரு நிறுவனத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.
கௌதம் அதானி
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் (APSEZ), குஜராத்தில் இருக்கும் இன்லேண்ட் கன்டெய்னர் டிப்போ (ICD) டம்பை-ஐ (Tumb) நவ்கர் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்திடம் இருந்து சுமார் 835 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ICD Tumb நிறுவனம்
ICD Tumb இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு கண்டெய்னர் டிப்போக்களில் ஒன்றாகும், இது சுமார் 0.5 மில்லியன் TEU திறன் கொண்டது. ICD ஆனது ஹசிரா துறைமுகத்திற்கும் நவா ஷேவா துறைமுகத்திற்கும் இடையில் முக்கிய வர்த்தகப் பகுதியாகத் திகழ்கிறது.
ICD என்றால் என்ன
ICDகள் என அழைக்கப்படும் உள்நாட்டு கண்டெய்னர் டிப்போக்கள், கண்டெய்னரில் லோட் செய்யப்பட்ட சரக்குகளைக் கையாளுவதற்கும் தற்காலிகமாகச் சேமிப்பிற்கும் அத்துடன் காலி செய்வதற்கும் பொருத்தப்பட்ட dry port ஆகும். இதன் பொருள், உள்நாட்டு வாடிக்கையாளர்கள் தங்கள் வளாகத்திற்கு அருகில் துறைமுகச் சேவைகளை மிகவும் வசதியாகப் பெற முடியும்.
மேற்கு கடற்கரை
அதானி போர்ட்ஸ் நிறுவனம் மேற்கு கடற்கரையில் ஆறு துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் அதாவது குஜராத்தில் முந்த்ரா, தஹேஜ், டுனா மற்றும் ஹசிரா, கோவாவில் மோர்முகாவ் மற்றும் மகாராஷ்டிராவில் திகி ஆகிய பகுதிகளில் துறைமுக வசதிகளைக் கொண்டு உள்ளது.
கிழக்கு கடற்கரை
இதேபோல் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஆறு துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் ஒடிசாவில் தம்ரா, கங்காவரம், விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திராவில் கிருஷ்ணாப்பட்டினம், மற்றும் தமிழ்நாட்டில் காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் ஆகியவற்றைக் கொண்டு உள்ளது.
புதிய திட்டங்கள்
மேலும் ஆதானி போர்ட்ஸ் கேரளாவின் விழிஞ்சம் மற்றும் இலங்கையின் கொழும்பில் இரண்டு டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகங்களையும் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் இந்தியாவின் துறைமுக வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.