உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் சீரழிந்து வரும் நிலையில், சில நிறுவனங்களின் செயல்பாடுகள் மட்டும் வழக்கத்தினை விட மாறாக அபரிதமாக செயல்பட்டு வருகின்றன.
இதற்கு மிக சிறந்த உதாரணங்களில் ஒன்று அதானி குழுமம் எனலாம். ஏனெனில் கடந்த மார்ச் காலாண்டில் கொரோனாவின் நெருக்கடிக்கு மத்தியிலும் அதன் நிகரலாபம் உச்சம் தொட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் அதன் லாபம் 285% அதிகரித்து, 1,288 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 334 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 4 மடங்கு அதிகமாகும்.
வருவாய் எவ்வளவு?
இதே ஒருங்கிணைந்த வருவாயானது 24% அதிகரித்து 3,608 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,921 கோடி ரூபாயாக இருந்ததாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்த அளவுக்கு செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் எவ்வளவு?
இந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டாக 5 ரூபாய் கொடுக்க, இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இதன் எபிடா விகிதம் 1020 - 1070 கோடி ரூபாயாக இருக்கலாம் என அதானி குழுமம் எதிர்பார்க்கிறது. அதே போல ப்ரீ கேஷ் ஃப்லோ 5500 - 6000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை
அதானியின் மியான்மர் திட்டத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், இது அமெரிக்க பொருளாதார தடைகளை மீறுவதாக கண்டறியப்பட்டால், மியான்மர் திட்டத்தினை கைவிடக்கூடும் என்றும் கூறியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பில் இருப்பதாக கூறி, எஸ்&பி குறியீட்டில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. எனினும் இது குறித்து தற்போது அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது.
வணிக நிலவரம்
இதே போல அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க, ஆஸ்திரேலிய அரசும் அனுமதி அளித்தது. இந்த திட்டத்திற்கு எஸ்பிஐ 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அதானி குழுமத்திற்காக கடன் வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் எஸ்பிஐ கடன் கொடுக்க கூடாது என வலுவான எதிர்ப்புகள் இருந்து வருகின்றன.
இன்று பங்கு விலை நிலவரம்
இப்படி அதானியில் வெளிநாட்டு வணிகங்கள் மிக மோசமாக உள்ள நிலையில் கூட, உள்நாட்டில் கங்காவரம் துறைமுகம், கிருஷ்ணாபட்டணம் துறைமுகம் என பல ஒப்புதல்கள் அதானிக்கு சாதகமாக உள்ளன. அதோடு கொரோனா காலகட்டத்திலும் இவரின் பங்குகள் பங்கு சந்தையில் அபரிதமான ஏற்றத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இன்று இதன் பங்கு விலையானது கிட்டதட்ட 1% ஏற்றம் கண்டு 768.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.