கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில் தற்போது சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்பபெட் நிர்வாகம் சுமார் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
அமெரிக்க டெக் நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான நெருக்கடிகளை அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய நாளில் இருந்து எதிர்கொண்டு வருகிறது. இதேவேளையில் ரெசிஷன் காரணமாக டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் சரிந்து வருகிறது.
இதைச் சமாளிக்கவே டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
ஆல்பபெட்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சரியாகப் பணியாற்றாத Poor Performing பிரிவில் இருக்கும் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டும், அதற்கான பணிகளைச் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த கூகுள் ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதமாகும்.
முன்னணி டெக் நிறுவனங்கள்
கடந்த 3 மாதத்தில் மெட்டா, மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ், டிவிட்டர், சேல்ஸ்போர்ஸ், ஆரக்கிள் எனப் பார்சூன் 500 பட்டியலில் இருக்கும் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது.
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை சில மாதங்களுக்கு முன்பே நிறுவனம் அதிகப்படியான லாபத்தைப் பெறவில்லை எனில் பணிநீக்கத்தை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்து இருந்தார். கூகுள் பல இக்கட்டான காலகட்டத்திலும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தவிர்த்து இருந்தது.
10000 ஊழியர்கள் பணிநீக்கம்
ஆனால் தற்போது நிலைமை மோசமாக இருக்கும் காரணத்தால் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் Poor Performing ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக ஸ்டாக் ரேங்கிங் மற்றும் பர்பாமென்ஸ் இம்ப்ரூவ்மென்ட் திட்டத்தின் வாயிலாக இந்த 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகப் போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
திறன் ஆய்வு முறை
இதேவேளையில் இப்புதிய ஊழியர்கள் திறன் ஆய்வு மூலம் கூகுள் நிர்வாகம் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய போனஸ் மற்றும் பங்கு அளிப்பு விகிதம் ஆகியவற்றையும் அளிப்பதைக் குறைக்க உள்ளது. பல முன்னணி நிறுவனங்களும் பணிநீக்கம் செய்த நிலையில் கூகுள் எவ்விதமான அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. ஆனால் ஹெட்ஜ் பண்ட் முதலீட்டாளர்களின் வலியுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
6 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்
பொதுவாகக் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் அனைத்து வர்த்தகப் பிரிவில் இருக்கும் ஊழியர்களில் 2 சதவீத ஊழியர்களை மட்டுமே Poor Performing பிரிவில் வைக்கும், ஆனால் தற்போது புதிய ரேட்டிங் சிஸ்டம் மூலம் 6 சதவீதமாக உயர்த்திப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.
மொத்த ஊழியர்கள்
ஆல்பபெட் நிறுவனத்தில் மொத்தம் 187000 பேர் பணியாற்றி வருகின்றனர், ஒவ்வொரு வருடமும் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை அளவு 20 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 5-6 சதவீத ஊழியர்கள் அதாவது 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளது சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்பபெட் நிர்வாகம்.
மீடியன் சம்பள அளவு
ஆல்பபெட் நிறுவனத்தின் மீடியன் சம்பள அளவு 295,884 டாலர் தற்போது சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிலையில் தற்போது வெளியேற்றப்படும் கூகுள் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பது பெரும் சவால், அப்படிக் கிடைத்தாலும் ஏற்கனவே வாங்கிய சம்பளத்திற்கு இணையாகவும், கூடுதலாகவும் கிடைப்பது கடினம்.