கிரிப்டோ சந்தையில் மிகவும் பிரபலமான வர்த்தகப் பொருளாக விளங்கும் பிட்காயின் மதிப்பு சீனாவின் நடவடிக்கை மற்றும் கடுமையான உத்தரவால் 6 மாத சரிவைச் சந்தித்துள்ளது.
சீன அரசு டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்த பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் கிரிப்டோகரன்சி வர்த்தகம், முதலீடு, உற்பத்தி என அனைத்தையும் தடை செய்தது. இந்த அறிவிப்பு சீன முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சீன அரசு தற்போது ஒவ்வொரு பிராந்தியமாகப் பிட்காயின் உற்பத்தியைத் தடை செய்து வருகிறது.
சீனாவில் பிட்காயின் உற்பத்தி
பல வருடமாகச் சீனாவில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியை மிகவும் பிரம்மாண்டமாக உற்பத்தி செய்து வந்த நிலையில் சீன அரசின் தடை உத்தரவு கிரிப்டோ உற்பத்தியை மொத்தமாக முடங்கியுள்ளது.
சீனா ஆதிக்கம்
உலகளவில் பிட்காயின் உற்பத்தி சந்தையில் சுமார் 70 சதவீதம் சீனாவில் தான் உள்ளது. இந்நிலையில் சீன அரசு கிரிப்டோ உற்பத்தி நிறுவனங்களுக்கான மின்சார இணைப்பை நேற்று முதல் துண்டித்துள்ளது.
ஹேஷ் ரேட் அளவு சரிவு
இதன் மூலம் சீனாவின் 90 சதவீத பிட்காயின் உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளது. பிட்காயின் உற்பத்தி திறனை ஹேஷ் ரேட் என அழைக்கப்படுகிறது. ஹேஷ் ரேட் அளவு 2 நாட்களுக்கு முன்பே தனது உச்ச அளவான 180.66m-ல் இருந்து 127m ஆகக் குறைந்துள்ளது.
பிட்காயின் மதிப்பு
இதன் எதிரொலியாகப் பிட்காயின் மிதிப்பு 40000 டாலர் அளவீட்டில் இருந்து 29,964.29 டாலராகத் தற்போது குறைந்துள்ளது. இதனால் பிட்காயின் மதிப்பு 6 மாத சரிவை எதிர்கொண்டு உள்ளது.