வல்லரசு நாடுகளையும் ஆட்டிவைத்து வரும் பணவீக்கமும், பொருளாதார மந்த நிலையில் தொடர்ந்து பல மாதங்களாக இருக்கிறது. இதனால் உலக நாடுகளில் அடுத்தடுத்து ரெசிஷன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் நடந்தால் 2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தை ஆட்டிவைத்த சர்வதேச நிதி நெருக்கடிக்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில் சிட்டிபேங்க் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ரெசிஷன்
உலக நாடுகளில் ரெசிஷன் பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் கச்சா எண்ணெய்-க்கான டிமாண்ட் உலக நாடுகள் முழுவதும் சரிந்து இதன் விலை 2022ஆம் ஆண்டின் முடிவிற்குள் ஒரு பேரல் 65 டாலராகவும், 2023ஆம் ஆண்டு முடிவிற்குள் 45 டாலராகவும் சரியும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சிட்டி பேங்க் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் உற்பத்தியில் OPEC+ நாடுகள் எவ்விதமான தலையீடும் செய்யாமல் இருந்தாலும், கச்சா எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு ஆகியவற்றில் புதிய முதலீடுகள் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் ரெசிஷன் காலத்தில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது எனச் சிட்டி குரூப் தெரிவித்துள்ளது.
1970க்கு இணையான பொருளாதாரம்
உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் பணவீக்கத்தைக் குறைக்க உலக நாடுகளில் மத்திய வங்கி அறிவித்துள்ள வட்டி விகித உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக வைத்த பார்க்கும் போது, சிட்டி குரூப் சர்வதேச எனர்ஜி சந்தையை 1970களில் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கத்தை ஒப்பிட்டுக் கூறுகிறது.
தேவை, விலை சரியும்
வரலாற்றில் ரெசிஷன் பாதிப்பு உருவான அனைத்து நேரத்திலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது முக்கிய ஒற்றுமையாக இருக்கும் நிலையில், 2022ல் ரெசிஷன் வந்தால் கட்டாயம் கச்சா எண்ணெய் அதன் அடிப்படை விற்பனை விலையில் வர்த்தகம் செய்யும் நிலை வரலாம்.
கச்சா எண்ணெய் விலை
ஜூலை 4ஆம் தேதி உலக நாடுகளில் நிலவும் ரெசிஷன் அச்சத்தால் உலக நாடுகளில் எரிபொருள் தேவை குறையும் என்ற அச்சம் அதிகரித்த காரணத்தால் கணிசமாக விலை சரிந்தது, ஆனால் செவ்வாய்க்கிழமை நிலைமை மாறியுள்ளது. இன்று WTI கச்சா எண்ணெய் விலை 1.27 டாலர் அதிகரித்து 109.7 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.14 சரிந்து 113.4 டாலராக உள்ளது.