டெல்லி: சர்வதேச அளவில் நிலவி வரும் கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் இந்தியாவின் ஏற்றுமதியானது நடப்பு ஆண்டில் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் கொரோனா காலகட்டத்தில் நீடித்த லாக்டவுன், கடுமையான கட்டுப்பாடுகள், லாகிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகள் காரணமாக ஏற்றுமதி இறக்குமதியானது சரிவினைக் கண்டது.
இதனால் ஏற்கனவே மோசமாக சரிந்திருந்த பொருளாதாரம் இன்னும் மோசமான சரிவினைக் கண்டது.
கண்டெய்னர்கள் பற்றாக்குறை
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் பொருளாதாரம் தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளது. உற்பத்தி விகிதமும் அதிகரித்து வருகின்றது. ஆனால் கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் மீண்டும் ஏற்றுமதி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டிற்கு மேலும் பின்னடைவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகம்
இது சீனாவின் தற்போது நிலவி வரும் கட்டுப்பாடுகள் காரணமாக, குறைந்தளவிலான கண்டெய்னர்கள் மட்டுமே செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே சமயம் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தேவை அதிகம் உள்ளது. ஆக இது கண்டெய்னர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இதனால் கடந்த 10 - 15 நாட்களில் கண்டெய்னர்களுக்கான கட்டணமும் வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ளதாக இத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
வரலாறு காணாத ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதியானது கடந்த ஜூலை மாதத்தில் 35.2 பில்லியன் டாலர் என்ற அளவில், வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ளது. இது வரலாறு காணாத அளவு அதிகரிப்பாகும்.
எனினும் தற்போது தேவை என்பது அதிகளவில் இருந்தாலும், கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் ஏற்றுமதி குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
ஏற்றுமதி குறையலாம்
அதோடு கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் கட்டணங்கள் அதிகரிப்பும், இன்னும் ஏற்றுமதியினை குறைக்கலாம் எனும் நிலையே இருந்து வருகின்றது.
இத்தொழிற்துறை அதிகாரிகளின் கருத்துப்படி, சில மாதங்களுக்கு முன்பு கண்டெய்னர்களுக்கு கட்டணங்கள் 3000 - 4000 டாலர்களாக இருந்த நிலையில், தற்போது 7000 - 10000 டாலர்களாக அதிகரித்துள்ளது. எனினும் இந்த கட்டண செலவானது, தூரத்தினை பொறுத்து மாறுபடும். இதில் கட்டணங்கள் கூடலாம் குறையலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இழப்பு ஏற்படலாம்
ஏற்கனவே கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் கட்டணங்கள் அதிகரிப்பால் செலவினங்கள் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் மத்திய அரசிடமும் முறையிடபட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசு தலையிட வேண்டும். தற்போது மேற்கத்திய நாடுகளில் வரவிருக்கும் முக்கிய விடுமுறை காலத்திற்கு இந்த ஏற்றுமதியினை அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்ப முடியாவிட்டால், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் தொழில் துறையினர் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.
பல்வேறு துறைமுகங்களில் உள்ள கண்டெய்னர்கள்
FIEO அரசிடம் நாட்டில் ஆங்காங்கே இருக்கும் பல்வேறு துறைமுகங்களில் இருக்கும் 25,000 - 30,000 கண்டெய்னர்களை கொடுக்குமாறு கேட்டுள்ளது. இந்த கண்டெய்னர்கள் தங்கள் மற்றும் பிற துறைகளுடனான பிரச்சினை காரணமாக கொண்டு வரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. FIEO தலைவர் அஜய் சஹாய், அரசிடம் இந்த கண்டெய்னர்களை பயன்படுத்த உதவுமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தேங்கிக் கிடக்கும் பொருட்கள்
மேலும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் குறைந்த மதிப்பிலான சில பொருட்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிரானைட்கள், டீ, அரிசி, பர்னிச்சர் ஆகியவை முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இது கண்டெய்னர்கள் பற்றாக்குறையால், கட்டணங்கள் மோசமான அளவு அதிகரித்துள்ளதால் குறைந்துள்ளதாகவும், இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.
விமானம் மூலம் ஏற்றுமதி தடைபடவில்லை
எனினும் கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் கப்பலில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் விலை மதிப்புமிக்க ரத்தினங்கள் மற்றும் நகைகள், கெமிக்கல்ஸ், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொருட்கள் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதால் அவை பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கண்டெய்னர்களை வாங்கி குவித்த சீனா
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் சீனா நிறுவனங்கள், அதிக விலை கொடுத்து கப்பல் போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படும் கண்டெய்னர்களை வாங்கி குவித்ததாக செய்திகள் வெளியானது. அதுவும் அதிகளாவிலான பிரீமிய தொகை கொடுத்து வாங்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன் எதிரொலி இப்போது தான் சந்தையில் வரத் தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்
சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா களம் இறங்கிய நிலையில், அமெரிக்காவின் போக்குவரத்து வளர்ச்சியினை தடை செய்யும் விதமாக சீனா இந்த நடவடிக்கையில் இறங்கியது. ஆனால் இன்று கண்டெய்னர் வர்த்தகமே நல்ல லாபகரமாக மாறியுள்ளது. மொத்தத்தில் சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு சிக்கலைத் தான் ஏற்படுத்தியுள்ளது.