கொரோனாவின் இரண்டாம் கட்ட அலையானது இந்தியாவினை ஆட்டிப்படைத்து வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக மதிப்பிட முடியாத அளவுக்கு இழப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
பொருளாதாரம், வேலையின்மை, வேலையிழப்பு இவற்றை எல்லாவற்றையும் தாண்டி, மனித உயிர்களையும் காவு வாங்கிக் கொண்டுள்ளது.
இப்படி மக்களை பாடாய்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி தலைமையிலான அரசும், மாநில அரசுகளும் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் நிலைமையானது கைமீறி போய்விட்டதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பல்வேறு தரப்பும் உதவிகள்
இதற்கிடையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தாக்கம் என்பது மிக மோசமாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். இதற்கிடையில் அண்டை நாடுகளும் இந்தியாவுக்கு உதவி கரம் நீட்டிக் கொண்டுள்ளன. பல்வேறு தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், என்ஜிஓக்கள் என பலரும் இந்தியாவுக்காக உதவியை செய்து வருகின்றனர்.
டிவிஎஸ்-சின் சூப்பர் அறிவிப்பு
அந்த வகையில் நாட்டின் முன்னணி வாகன நிறுவனமான நம்ம ஊரு டிவிஎஸ் நிறுவனமும் 40 கோடி ரூபாய்க்கான கொரோனா உதவிகளை அறிவித்துள்ளது. இதில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சுந்தரம் கிளேட்டன் மற்றும் டிவிஎஸ் குழுமத்தினை சேர்ந்த மற்ற குழும நிறுவனங்கள் என அனைத்தும் இணைந்து இந்த உதவிகளை செய்யப் போவதாக அறிவித்துள்ளன.
இதெல்லாம் கொடுக்க போறோம்
நிவாரண முயற்சிகளின் ஒரு பகுதியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சப்ளை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு தமிழ் நாடு கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு, ஒரு நாளைக்கு 20,000ம் உணவு பொட்டலங்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
லிஸ்டில் இதுவும் உண்டு
மூன்று மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் ஹெல்த்கேர் செண்டர்களுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பேஸ் மாஸ்குகள், ஆயிரக்கணக்கான ஆக்சிமீட்டர்கள், பிபிஇ கிட், சானிடைசர்கள், அத்தியாவசிய மருந்துகள் என பலவும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றல்
இது குறித்த அறிவிப்பில், டிவிஎஸ் நிறுவனம் சென்னையில் உள்ள இரண்டு பெரிய மருத்துவமனைகளாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி பொது மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து மிக நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ் சேவையும் உண்டு
இது தவிர உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இரண்டு ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க கூடிய அம்சங்களுடன் உடையது என்றும், இது ஓசூர் மற்றும் மைசூரில் அதன் தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சேவையை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஓன்றிணைந்து போராடுவோம்
இதற்கிடையில் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், தற்போது நாட்டில் முன்னோடியில்லாத கொரோனாவின் மோசமான இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகிறோம். இதனை கட்டுப்படுத்த, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைவரும் ஒண்றிணைந்து முயற்சிகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
வாழ்க்கை தரம்
கிராமப்புற இந்தியாவில் உள்ள சுகாதார மையங்களில் உதவிகளை வழங்குவதற்கும், எளிதாக அடிமட்டத்தில் இருந்து மருத்துவ சேவை அணுகலை பெறுவதற்கும், நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம். இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறோம்.
தொடர்ந்து உதவி
கடந்த 100 வருடங்களாக தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வரும் டிவிஎஸ் குழுமம், தொடர்ந்து அதை செய்யும் என்றும் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முதல் கட்ட பரவலின்போதும் கொரோனா பரவலுக்கு மத்தியில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிலான தொகையை டிவிஎஸ் அறிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக தற்போதும் அறிவித்துள்ளது. .