கொரோனா வைரஸால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. எப்போது கொரோன ஒழியும், மீண்டும் உலகம் சகஜ நிலைக்கு வரும் என்று யாருக்கு ஒரு தெளிவு இல்லை.
இதன் விளைவாக, பலரின் வேலைகள் பறி போகும் என்கிற பயம், உலகம் முழுக்க பரவி இருக்கிறது.
இப்படி கொரோனா வைரஸால் இந்தியப் பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய, நிதி அமைச்சர் ஒரு உதவித் திட்டத்தை தயார் செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முதல் திட்டம்
கடந்த மார்ச் 2020-ல் லாக் டவுன் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சுமாராக 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்களை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதில் ஏழை மக்களுக்கு அரிசி பருப்பு கொடுப்பது தொடங்கி பெண்களுக்கு 500 ரூபாய் கொடுப்பது வரை பல திட்டங்கள் அடங்கும்.
இரண்டாவது திட்டம்
இப்போது, இன்னொரு அதிரடி உதவித் திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இது பிரத்யேகமாக, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் விதத்தில் இருக்கும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
ஊக்குவிப்பு
கொரோனா வவைரஸால் (லாக் டவுனால்) அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் துறைகளை, இந்த லாக் டவுன் காலம் முடிந்த பின் ஊக்குவிக்கும் விதத்தில் இந்த திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்கிறார்களாம். அடுத்து வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்து நிதி அமைச்சகத்தில் இருந்து அறிவிப்புகள் வெளியாகுமாம்.
ஏழை எளிய மக்களுக்கு
இந்த கொரோனா வைரஸால் பொருளாதார ரீதியாக, அதிகம் பாதிக்கப் படக் கூடிய ஏழை எளிய மக்களின் பாதிப்புகளை குறைக்கவும் திட்டங்களை வகுத்துக் கொண்டு இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளம் சொல்லி இருக்கிறது. எப்படியாவது கொரோனா வைரஸ் தாக்கத்தை இந்தியர்கள் எல்லோருக்கும் குறைத்தால் சரி.
எழுவர் குழு
பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அதானு சக்ரபர்த்தி தலைமையில், ஒரு சிறப்புக் குழுவை பிரதமர் அலுவலகம் & நிதி அமைச்சகம் இணைந்து அமைத்து இருக்கிறார்களாம். இதில் நிதி அமைச்சக செயலர்கள், தொழிலாளர் நலத் துறை செயலர்கள், கிராம புற மேம்பாட்டுத் துறை செயலர்கள், பிரதமர் அலுவலகச் செயலர்கள் எல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.
பணி
இந்த சிறப்புக் குழு இந்தியாவின் சிறு குறு தொழில் முனைவோர்கள், ஹோட்டல் துறை, விமான சேவைத் துறை, விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள் என பல துறைகளில் இருக்கும் அழுத்தங்களை மற்றும் சவால்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உதவித் திட்டங்களை வடிவமைத்துக் கொண்டு இருக்கிறார்களாம். குறிப்பாக வேலை இழந்தவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டங்களை வடிவமைக்கிறார்களாம்.
எதிர்பார்க்கலாம்
ஆக, கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும், இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, பாதிக்கப்பட்டு இருக்கும் வியாபாரங்கள், வியாபாரிகள், தனி மனிதர்கள் மற்றும் வேலை இழந்தவர்களை மீட்க, ஒரு நல்ல தரமான திட்டத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். சீக்கிரம் அறிவிங்க மேடம், 130 கோடி இந்தியர்களும் உங்களுக்காக வெயிட்டிங்.