கொரோனா வைரஸ். ஒரே ஒரு வைரஸால் உலகம் ஸ்தம்பித்துவிட்டது. அதில் இருந்து மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மீள ஒவ்வொரு நாடும், தங்கள் கஜானாக்களில் இருந்து பணத்தை வாரி இரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் தான் கொரோனாவால் மக்கள் சிரமப்படாமல் இருக்க, இந்திய அரசு, 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு அரிசி பருப்பு தொடங்கி மாதாந்திர உதவித் தொகை வரை பலவற்றையும் அறிவித்தது.
ஆனால் இப்போது இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் விதத்தில் சிறு குறு வியாபாரிகளுக்கு மட்டும் தனியாக ஒரு உதவித் திட்டத்தை அறிவிக்கலாம் என இந்தியா டுடே தன் வலைதளத்தில் சொல்லி இருக்கிறது.
1 லட்சம் கோடி
இந்த விஷயத்தை இரண்டு அரசு தரப்பு அதிகாரிகள் இன்று உறுதி செய்து இருப்பதாகவும் இந்தியா டுடே வலைதளச் செய்திகள் சொல்கின்றன. சிறு வியாபாரிகளை கருத்தில் கொண்டு இந்த இரண்டாவது உதவித் திட்டம் இருக்குமாம் இந்த திட்டம் சுமார் 1 லட்சம் கோடி மதிப்புடையதாக இருக்குமாம். ஏன் சிறு குறு வியாபாரிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம்?
பொருளாதாரத்தில் சிறு வியாபாரிகள்
இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பான 2.9 ட்ரில்லியன் டாலரில் சுமார் 25 சதவிகிதம் சிறு குறு வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர்களால் வருகிறதாம். அதோடு இந்தியாவில் சுமாராக 50 கோடி பேர் இந்த எம் எஸ் எம் இ நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளின் கீழ் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறார்களாம். எனவே தான் இவர்களுக்கு சிறப்பு கவனமாம்.
பெரு நிறுவனங்களுக்கு
இந்த சிறு குறு தொழில் முனைவோர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான திட்டத்துக்குப் பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு தனியாக ஒரு உதவித் திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். பெரு நிறுவனங்கள் கொரோனா வைரஸ் லாக் டவுனால் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்துவிட்டு தான் இந்த திட்டம் தயாராகுமாம்.
என்ன சிறப்பு அம்சம்
இந்த சிறு குறு வியாபாரிகளுக்காக அறிவிக்க இருக்கும் திட்டங்களில், வங்கிக் கடன் வரம்புகளை அதிகரிப்பது, எம் எஸ் எம் இ தரப்பினர் சில வரிச் சலுகைகளைப் பெற சில வரம்புகளை உயர்த்துவது, வருமான வரி போன்ற வரிகளைச் செலுத்துவதற்கான காலக் கெடுக்களை நீட்டிப்பது போன்றவைகளும் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.