சீனாவினை ஆட்டிப்படைத்து வரும் ஆட்கொல்லி வைரஸான கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் வருத்தத்தை அளித்தாலும், மறுபுறம் அது இந்திய வர்த்தகர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.
ஏனெனில் இந்தியாவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையையொட்டி, சீனாவில் தயாரிக்கப்படும் ஆடம்பரமான நீர் துப்பாக்கிகள் மற்றும் நீர் தெளிப்பான்களின் இறக்குமதி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 1,100 பேருக்கு மேல் பலி வாங்கியுள்ள இந்த வைரஸ், மேலும் பரவாமல் தடுக்க, சீனா அரசு அந்த நாட்டு மக்களுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது.
உற்பத்தி குறைவு
இதன் காரணமாக சீனாவில் உற்பத்தியும் குறைந்துள்ளது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸானது வான் வழியாக விமானம் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல நாடுகள் சீனாவுடன் தற்காலிகமாக இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதனால் வழக்கமாக ஹோலி பண்டிகைக்கென பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படும் பொம்மை வகைகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோலியிலும் தாக்கம்
இதனால் இது இந்தியாவில் ஹோலி பண்டிகையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. மும்பையில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20 - 25 சீனா பொம்மை இறக்குமதியாளர்கள், 18 மற்றும் 24 அங்குல சிறிய நீர் தொட்டிகளுடன் இணைக்கப்பட்ட 5 லட்சம் நீர் துப்பாக்கிகளை இறக்குமதி செய்து கொண்டு வருகிறார்கள். இதன் விலை ஒவ்வொன்றும் 300 - 500 ரூபாய் வரையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இறக்குமதி கடினம்
இந்த நிலையில் இந்த ஆண்டில் மார்ச் இரண்டாவது வாரத்தில் வரவிருக்கும் ஹோலி பண்டிகைக்கு, இன்னும் சில வாரங்களே உள்ளதால் இறக்குமதி செய்வது கடினம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக இந்திய வர்த்தகர்கள் சீனாவின் புத்தாண்டிற்கு பிறகு ஹோலிக்கு தேவையான வண்ணப் பொடிகளையும், நீர் துப்பாக்கிகள், தெளிப்பான்கள் என ஆர்டர் செய்யத் தொடங்குவார்கள்.
சீனா தொழில் சாலைகள் மூடல்
ஏனெனில் சீனாவில் இருந்து இந்த சரக்குகள் இந்தியாவை வந்து சேர 14 - 30 நாட்கள் ஆகும். இந்த நிலையில் இந்த ஆண்டு சீனா புத்தாண்டு ஜனவரி 25 அன்றும் கொண்டாடப்பட்டது, ஆனால் அந்த சமயத்தில் கொரோனாவின் தாக்கத்தினால், அங்குள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாதாரணமாக இந்த சமயத்தில் இறக்குமதி செய்ய ஆரம்பித்து இருப்பார்கள்.
விலை வேறுபாடு
இது குறித்து மும்பை டாய்ஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் அப்துல்லா ஷெரீப் கூறுகையில், நாங்கள் நிலைமையை மதிப்பிடுகிறோம். மேலும் சரக்குகளை ஆர்டர் செய்வோம் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அசோசெம் அமைப்பு, இந்தியா முழுவதும் சுமார் 250 உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சப்ளையர்கள் ஹோலி வண்ணங்கள், நீர் துப்பாக்கிகள் மற்றும் இது போன்ற பல பொருட்களின் மத்தியில், சீனாவின் புதுமையான மற்றும் ஆடம்பரமான ஹோலி பொம்மைகளுக்கு இடையில் 55% அதிகமான விலை வேறுபாடு இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்திய நீர் துப்பாக்கிகள் கவர்ச்சிகரமானவை
இது வண்ணங்கள் மற்றும் பாரம்பரிய துப்பாக்கிகள், தெளிப்பான்கள் மீது நுகர்வோருக்கு ஆர்வமின்மை காரணமாக இவைகள் சந்தைகளில் இருந்து கிட்டதட்ட மறைந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் அவை விலை மலிவானவை, கவர்ச்சிகரமானவை, பொதுமக்கள் மத்தியில் மிக பிரபலமானவை என்று கூறப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் விதமான நமது பாரம்பரியமான பிச்சார் துப்பாக்கிகள் ஆடம்பரமான துப்பாக்கிகளை விட மலிவானவை, கவர்ச்சிகரமான நீர் அழுத்தத்தை கொண்டவை என்று யுனைடெட் டாய்ஸ் அசோசியேஷன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பங்கு இவ்வளவு தான்
இந்தியாவின் பொம்மைத் தொழில் மதிப்பு 4,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் மோசமான விஷயம் என்னவெனில் சீனாவின் இறக்குமதி 85% பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதே இந்தியாவின் பங்கு வெறும் 5% மட்டுமே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா உற்பத்தியாளர்கள் பேட்டரி பொம்மைகளை உருவாக்குவதில்லை. ஆனால் இவைகள் தான் குழந்தைகளிடையே மிக ஈர்க்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றன.
இங்கு தான் தயாரிப்பு
சீனாவிலிருந்து இந்தியாவை வந்தடையும் பெரும்பாலான பொம்மைகள், சீனாவின் குவாங்டாங்கில் தயாரிக்கப்படுகின்றன. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கொரோனா வைரஸ் மையம் கொண்டுள்ள இடத்திலிருந்து இது 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வரியும் அதிகரிப்பு- இறக்குமதி குறையலாம்
இந்திய பொம்மை இறக்குமதியாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக இருப்பு வைப்பதில்லை. கடந்த ஒரு மாதமாகமே சீனாவில் இருந்து எந்தவொரு இறக்குமதியும் செய்யப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மத்திய அரசு பொம்மைகளுக்கு கூடுதலாக 200% வரி அதிகரிப்புக்கு மத்தியில், சீனாவில் கொரோனாவின் தாக்கமும் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால் பொம்மைகள் வரத்து குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500% வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும், இது உள்ளூர் வர்த்தகர்களை பாதுகாப்பதற்காக செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நல்ல வாய்ப்பு தான்
இந்திய பொம்மைத் தொழிலில் தற்போது பொம்மை உற்பத்தியை பெரிய அளவில் ஆதரிக்க சாத்தியமான சுற்றுச்சூழல் இல்லை, மேலும் அளவு, வடிவமைப்பு, பூச்சு, விலை ஆகியவற்றின் அடிப்படையில் சீனா உற்பத்தியாளர்களுடன் போட்டி போட இந்தியாவில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எப்படி எனினும் சீனாவின் இந்த வாய்ப்பு நிச்சயம், இந்தியா உற்பத்தியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.