இந்திய ரிசர்வ் வங்கியின் மினி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் மக்களும், வர்த்தக சந்தையும் இயங்கி வந்தாலும், சைலென்ட்டாக ஒரு விஷயம் பெரிய பூதாகரமாக உருவாகி வருகிறது. உங்க பர்ஸ்சில் 500 ரூபாய் நோட்டு உள்ளதா..? உடனே செக் பண்ணுங்க.
இந்தியாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2022-23 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 500 ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளது. இதன் மூலம் கண்டறியப்பட்ட போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மட்டும் 2022-23 ஆம் நிதியாண்டில் 91,110 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மே 30 ஆம் தேதி வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளது என்றும், இதே காலகட்டத்தில் போலி 2,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளின் எண்ணிக்கை 9,806 ஆகக் குறைந்துள்ளது என இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 20 ரூபாயில் போலி நோட்டுகள் 8.4 சதவீதம், 500 ரூபாயில் போலி நோட்டுகள் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 10, 100 மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான போலி கள்ள நோட்டுகள் 11.6 சதவீதம் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கித் துறையில் கண்டறியப்பட்ட மொத்த போலி இந்திய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2022- 23 ஆம் நிதியாண்டில் 2,30,971ல் இருந்து 2,25,769 ஆக குறைந்துள்ளது. மேலும் ஆர்பிஐ கடந்த நிதியாண்டில் 4884 கோடி ரூபாய் தொகையை ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்காக செலவிட்டு உள்ளது. இதுவே 2023-23 ஆம் நிதியாண்டில் 4682.80 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் ஆர்பிஐ கைப்பற்றி கள்ள ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களின் மொத்த பட்டியல்.
1 ரூபாய் - 4
2 மற்றும் 5 ரூபாய் - 3
10 ரூபாய் - 313
20 ரூபாய் - 337
50 ரூபாய் - 17,755
100 ரூபாய் - 78,699
200 ரூபாய் - 27,258
500 ரூபாய் (பழைய நோட்டு) - 6
500 ரூபாய் (புதிய டிசைன்) - 91,110
1000 ரூபாய் - 482
2000 ரூபாய் - 9806
மொத்த கள்ள ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள் - 2,25,769
இதனால் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது ஒரு முறைக்கு இரு முறை செக் செய்து வாங்கிக்கொள்வது உத்தமம்.