இந்தியச் சாலை போக்குவரத்தில் புதிய அறிவிப்பாக நாடு முழுவதும் பழைய மற்றும் புதிய வாகனங்களுக்குப் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 15ஆம் இரவு முதல் டோல் பிளாசாவில் இருக்கும் அனைத்து வழிகளையும் பாஸ்டேக் வழியாக மாற்றப்பட்டு உள்ளது.
பாஸ்டேக் பெறுவதற்குப் பல முறை வாகன உரிமையாளர்களுக்குக் கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 15க்குப் பின் அவகாசம் நீட்டிக்கப்படாது, நாடு முழுவதும் எவ்விதமான தளர்வுகளும் இன்றிச் சாலை போக்குவரத்தில் பாஸ்டேக் விதிமுறைகளை 100 சதவீதம் அமலாக்கம் செய்யப்பட்டுக் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் பாஸ்டேக் மூலம் பெறும் கட்டணத்தில் மத்திய அரசு புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.
பாஸ்டேக் விதிமுறை கட்டாயம்
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து வாகனங்கள் மற்றும் அனைத்து டோல் பிளாசா வழித் தடத்திலும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களில் மட்டும் பாஸ்டேக் வாயிலாகப் பெரும் கட்டணத்தின் வசூல் சுமார் 23 சதவீதம் உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
பாஸ்டேக் கலெக்ஷன் சாதனை
மேலும் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் வசூல் அளவீடுகள் உயர்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் பாஸ்டேக்-ன் வசூல் அளவு சுமார் 102 கோடி ரூபாய் அளவில் உயர்ந்து சாதனைப் படைத்துள்ளது எனத் தேசிய நெடுஞ்சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் டோல் பிளாசாவில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரமும் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
85 கோடி ரூபாய் வசூல்
இதற்கு முன்பு பாஸ்டேக் மூலம் ஒரு நாளில் அதிகப்படியாக வசூல் செய்யப்பட்ட அளவீடு 85 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து வாகனங்களும், டோல் பிளாசா வழித்தடங்களும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பின்பு 102 கோடி ரூபாய் தொகையை ஓரே நாளில் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
பணப் பரிமாற்றம்
மேலும் மொத்த டோல் பிளாசா வசூலில் பணம் மூலம் பெறப்படும் தொகை 10 சதவீதத்திற்கும் குறைவான அளவீட்டை அடைந்துள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை கூறுகிறது.
இந்த மாற்றம் மூலம் டோல் பிளாசா வசூல் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
2 நாள் கணக்கீடு
தேசிய நெடுஞ்சாலைத் துறை டோல் பிளாசா வசூல் அளவீடுகள் கிடைக்கவும் கணக்கிடவும் 2 நாட்கள் குறைந்தது தேவைப்படும் எனவும் கூறியுள்ளது. இதனாலேயே கடந்த வாரத்தின் 4 நாள் தரவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது.