உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும் ஜெர்மனி நாட்டில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகப்படியான தட்டுப்பாடு விளங்குவதாகப் பெடர்ல் வேலைவாய்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சனையை உடனடியாகவும் வேகமாகவும் சரி செய்ய ஜெர்மனி அரசு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளைப் போல வெளிநாட்டில் இருந்து திறன் வாய்ந்த ஊழியர்களைத் தன்நாட்டிற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.
இது வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் எனத் துடியாய் துடிக்கும் பல கோடி இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
ஜெர்மனி
உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜெர்மனி 4வது இடத்தில் உள்ளது, ஆட்டோமொபைல் துறைக்கு மட்டும் அல்லாமல் இயந்திரங்கள், இரசாயன பொருட்கள், மின்னணு பொருட்கள், மின் உபகரணங்கள், மருந்துகள், போக்குவரத்து உபகரணங்கள், அடிப்படை உலோகங்கள், உணவு பொருட்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் எனப் பல துறையில் சிறந்து விளங்குகிறது.
அனைத்திற்கும் மேலாக ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் உயர் தரத்திற்கு பெயர் போனவை.
வெளிநாட்டு ஊழியர்கள்
தற்போது ஜெர்மனி நாட்டில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகப்படியான தட்டுப்பாடு நிலவி வரும் காரணத்தால் ஜெர்மனி அரசு 2020ல் அறிமுகம் செய்த Skilled Workers Immigration Act திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
பாஸ்ட் டிராக் விசா
இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் காரணத்தால் புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேகமாக விசா அளிப்பது, குடியிருப்பு அனுமதி வழங்குவதில் மாற்றங்களைச் செய்யத் துவங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு
2020ல் கொரோனா மற்றும் சுற்றுலா தடை அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை மந்தமாக்கியுள்ளது மட்டும் அல்லாமல் மக்கள் தொகை எண்ணிக்கையும் பெரிய அளவில் மாற்றமில்லை.
4,00,000 வெளிநாட்டு ஊழியர்கள்
இந்தச் சூழ்நிலையில் தற்காலிகமாகப் பணியில் இருந்த வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையும் 3 சதவீதம் அதிகரித்துள்ளதால் இந்த இடைவெளியை சமாளிக்க 4,00,000 வெளிநாட்டு ஊழியர்களை ஒவ்வொரு வருடமும் பணியில் அமர்த்த திட்டமிட்டு வருகிறது ஜெர்மன் அரசு.
ஜெர்மன் அரசு திட்டம்
இதேவேளையில் ஜெர்மன் அரசு திறனற்று இருக்கும் ஜெர்மன் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், அதிகப்படியான பெண் ஊழியர்களை வேலைவாய்ப்பு துறைக்கு அழைத்து வரும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது. இதில் ஐடி துறை ஊழியர்களுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
ஐடி ஊழியர்கள்
எந்த ஒரு நாடாக இருந்தாலும் கல்வியை முக்கியக் காரணியாகக் கொண்டு தான் விசா அளிக்கப்படுகிறது, ஆனால் ஜெர்மனி ஐடி துறையில் அதிகப்படியான ஊழியர்கள் தட்டுப்பாடு இருக்கும் காரணத்தால் 5 வருடம் நிலையான பணி அனுபவம் இருந்தால் போதும் ஜெர்மன் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்று அதன் மூலம் விசா பெற முடியும். இப்புதிய மாற்றத்தை தற்போது சேர்த்துள்ளது ஜெர்மனி அரசு.
மொழி கட்டுப்பாடு
இதேவேளையில் ஜெர்மனி நாட்டில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டினர் ஜெர்மன் மொழியில் level B1-ஐ பாஸ் செய்திருக்க வேண்டும். ஜெர்மனி நாட்டில் ஆட்சி மொழி மட்டும் அல்லாமல் கல்வி மற்றும் வர்த்தக மொழியும் ஜெர்மன் ஆக இருக்கும் நிலையில் இந்தக் கட்டுப்பாடு உள்ளது.