உலகளவில் கம்ப்யூட்டர் சிப்-க்கான தட்டுப்பாடு அதிகமாகியுள்ள நிலையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கார் தயாரிப்பை நிறுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, முன்னணி நிறுவனங்களின் வருவாயும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே ஜப்பான் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மே மாதத்தில் கிட்டதட்ட ஒரு வாரம் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், தற்போது புதிதாகப் பல நிறுவனங்கள் உற்பத்தி முடக்குவதாக அறிவித்துள்ளது.
ஜப்பான் ஹோண்டா
ஜப்பான் ஹோண்டா மோட்டார்ஸ் சிப் தட்டுப்பாடு காரணமாகத் தனது 3 தொழிற்சாலைகளை மே மாதத்தில் கிட்டதட்ட ஒரு வார காலம் தற்காலிகமாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து 12 மணிநேரத்தில் BMW, போர்டு, ஆப்பிள் எனப் பல நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.
BMW மற்றும் போர்டு நிறுவனங்கள்
சிப் தட்டுப்பாடு நிலவும் காரணத்தால் BMW ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் ஷிப்ட் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும், போர்டு தனது வருமானத்தின் கணிப்பை சிப் தட்டுப்பாட்டுக் காரணமாகக் குறைத்தும், கேட்டர்பில்லர் சந்தைக்குத் தேவையான அளவிற்கு உபகரணங்களைத் தயாரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
இதேபோல் ஐபோன், ஐபேட் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இக்காலாண்டில் சிப் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பாதிக்கும் என்பதால் நடப்பு நிதியாண்டில் வருவாய் அளவீட்டில் 3 பில்லியன் முதல் 4 பில்லியன் டாலர் வரையில் குறையும் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி லூகா தெரிவித்துள்ளார்.
தேவை அதிகரித்தது
உலகளவில் கருவிகளுக்கான தேவை மிகவும் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், தேவைக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிப் உற்பத்தி நிறுவனங்கள் தவிக்கிறது. இதுமட்டும் அல்லாமல் உற்பத்தி அளவீட்டை உடனடியாக அதிகரிக்க முடியாத காரணத்தால் தான் இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
கொரோனா தொற்றுக் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்தாலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன், ப்ளூடூத் ஹெட்செட் எனப் பல கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை
மேலும் ஆட்டோமொபைல் துறையில் தற்போது அதிகளவிலான எலக்ட்ரானிக்ஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பு அதிகரித்துள்ள காரணத்தால் கார்களுக்கான கம்ப்யூட்டர் சிப் தேவையும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று
இதுமட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகள் கொரோனா தொற்றைக் கடந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கார் மற்றும் ஸ்மார்ட்போன் தாண்டி அனைத்து கருவிகளுக்குமான தேவை அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் தேவையைச் சிப் உற்பத்தி நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை என்பதே தற்போது பிரச்சனை.
சிப் உற்பத்தி நிறுவனங்கள்
உலகின் முன்னணி சிப் உற்பத்தி நிறுவனங்களான நோக்கியா, குவால்கம், எஸ்டி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், சாம்சங் ஆகியவை சிப் உற்பத்தி அதிகரிக்க ஒரு பக்கம் போராடி வந்தாலும், சிப் தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருள் கிடைப்பதிலும் பாதிப்பு நிலவும் காரணத்தால் இத்துறை அதிகப்படியான சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது.