அதிகளவிலான வராக்கடனில் சிக்கித்தவித்த லட்சுமி விலாஸ் வங்கியை ரிசர்வ் வங்கி சிங்கப்பூர் DBS வங்கியின் இந்திய கிளையுடன் இணைத்துள்ள நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியில் டெப்பாசிட் செய்தவர் பணம் குறித்தும், ஊழியர்கள் வேலைவாய்ப்பு குறித்த பயத்திலும் இருந்தனர்.
இந்த நிலையில் DBS இந்திய வங்கி நிர்வாகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊழியர்களுக்கு நல்ல செய்தி
DBS வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியின் கிளை இணைத்த பின், வங்கி நிர்வாகம் 100% சதவீதம் கைப்பற்றிய பின்னர், லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ஊழியர்களும் தற்போது இருக்கும் அதே பணியில் DBS வங்கியின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற உள்ளனர். லட்சுமி விலாஸ் வங்கியில் இருக்கும் அதே கட்டுப்பாடுகள் விதிமுறைகள் தொடரும், இதில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என DBS இந்தியா தெரிவித்துள்ளது.
இதனால் ஊழியர்கள் யாருக்கும் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள்.
கட்டுப்பாடுகள் நீக்கம்
DBS வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியின் கிளை இணைத்த அதே நாளில் நாடு முழுவதிலும் இருக்கும் LVB வங்கியின் கிளைகள், ஏடிஎம்கள், டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் என அனைத்திலும் மோரோடோரியம் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது.
இதனால் மக்களுக்கு அனைத்து புதிய DBS வங்கி கிளைகளிலும் முழுமையான சேவை கிடைக்கும்.
வட்டி விகிதம்
இதேபோல் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தின் அதன் வாடிக்கையாளர்களுக்குச் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதிக்குக் கொடுத்த அதே வட்டி விகிதம் DBS வங்கி நிர்வாகத்திலும் தொடரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே லட்சுமி விலாஸ் வங்கியில் இருக்கும் மக்களின் பணத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என வங்கி நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் தற்போது வட்டி வருமானத்திற்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை.
புதிய திட்டங்கள்
இரு வங்கிகள் இணைக்கப்பட்ட நிலையில் LVB வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் DBS வங்கியின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும் என DBS இந்திய வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2,500 கோடி ரூபாய்
இதோடு இந்த ஒருங்கிணைந்த வங்கியின் வர்த்தக வளர்ச்சிக்காக DBS இந்திய வங்கி சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான கடனைகளை அளித்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.