இந்தியாவில் அவ்வப்போது சர்ச்சைக்குறிய செயலிகளுக்கு தடை விதித்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருந்த 348 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த செயலிகள் இந்திய பயனர்களின் தகவல்களை வெளிநாட்டுக்கு அனுமதியின்றி அனுப்பியதாக தெரிய வந்ததை அடுத்து இந்த செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
348 செயலிகள்
இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள நிறுவனங்களுக்கு இந்திய பயனர்களின் தகவல்களை அங்கீகரிக்கப்படாத முறையில் அனுப்பிய காரணத்தினால் 348 மொபைல் செயலிகள் உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிவித்துள்ளது.
அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
இதுகுறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் பாராளுமன்றத்தில் எழுத்து மூலம் பதில் அளித்தபோது, 'சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளை சேர்ந்த செயலிகள் இந்திய பயனர்களின் தகவல்களை அங்கீகரிக்கப்படாத முறையிலான பரிமாற்றம் செய்ததால் அந்த செயலிகள் தடை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எடுத்துள்ளதாகவும் தற்போது அந்த 348 மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இறையாண்மை
இந்திய பயனர்களின் தகவல் பரிமாற்றம் இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுகின்றன என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் இந்த 348 செயலிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எப்போது முடக்கியது என்பது குறித்து அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கூகுள் ப்ளேஸ்டோர்
கடந்த மாதம் The Battlegrounds Mobile India என்ற மொபைல் செயலியை மத்திய அரசு உத்தரவிட்டதால் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எந்தவித முன்னறிவிப்புமின்றி எடுக்கப்பட்டதாகவும், இந்த கேமை நீக்க இந்திய அரசு உத்தரவிட்டதை கூகுள் நிறுவனமும் உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிஜிஎம் செயலி
அதேபோல் தென்கொரிய நாட்டின் கேம் டெவலப்மென்ட் நிறுவனமான பிஜிஎம்-ன் தகவல் பரிமாற்றம் குறித்தும் இந்தியா தனது கவலையை தெரிவித்ததாகவும் இதனை அடுத்து அந்த செயலியும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம்
தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில செயலிகள் மற்றும் தளங்களை முடக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதால் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69ஏ-இன்படி, இந்த செயலிகள் முடக்கபட்டதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கமளித்தார்.
மீண்டும் இந்தியாவில்
இருப்பினும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சிவன் நந்தி என்பவர் இந்த நடவடிக்கை குறித்து கூறிய போது, '348 செயலிகளின் தடை என்பது தற்காலிகமானதுதான் என்றும் இந்தியாவில் இந்த செயலிகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.