நாடு முழுவதும் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் ஜூன் 30க்குள் பதிவு செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில் பெரும்பாலானோர் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் பதிவு செய்யாமல் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலத்தடி நீர்
இந்த நிலையில் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் இனிமேல் நிலத்தடி நீரை புதிதாக எடுப்பவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய நிலத்தடி நீர் ஆணையம்
இதுகுறித்து மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், மொத்த தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைடிகள், குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டு உள்ளிட்ட அனைத்து நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரூ.10,000 கட்டணம்
மேலும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ரூபாய் 10,000 பதிவு கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிலத்தடிநீர் எடுப்பதற்காக அனுமதியை பெற்று கொள்ள பயனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடவடிக்கை
மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவு செய்யாமல் நிலத்தடி நீர் எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.
இணையதளம்
மேலும் இது குறித்த தகவல்களுக்கு www.cgwa-noc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்தில் லாகின் செய்து அல்லது புதிதாக ரிஜிஸ்தர் செய்தால் இதுகுறித்த அனைத்து விபரங்களையும் பெற்று கொள்ளலாம்.
மாநில நீர் ஆணையம்
மேலும் ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநில நிலத்தடி நீர் ஆணையத்திடம் நிலத்தடி நீர் பயன்படுத்துவது குறித்து அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திரப் பிரதேசம், கோவா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மாநில அளவில் நிலத்தடி நீர் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.