நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று துவங்கிய 45வது ஜிஎஸ்டி கூட்டம் லக்னோவில் 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடக்கிறது, இதற்கு முன்பு கொரோனா தொற்றுக் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது.
கோவிட் 19 மருந்துகள்
இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் 45க்கும் அதிகமான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான அறிவிக்கப்பட்ட வரித் தளர்வுகள் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடையும் நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மிகவும் முக்கியமாகப் பார்க்கப்பட்டது.
கொரோனா தொற்று எண்ணிக்கை
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வரும் வேளையிலும், 3வது அலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது எனவும், அக்டோபர் மாதம் 3வது அலையின் உச்சத்தை எதிர்பார்க்கலாம் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
மத்திய அரசு ஏற்கனவே கொரோனா தொற்று மற்றும் கருப்புப் பூஞ்சை நோய்களை எதிர்க்கும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரித் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் 45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் சில முக்கிய மருந்துகளுக்கான வரிச் சலுகை டிசம்பர் 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
வரித் தளர்வுகள்
45வது ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவுகள் இன்னும் வெளியாக நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வரித் தளர்வுகள் உடன் கூடுதலாகச் சில மருந்துகளைச் சேர்த்து, டிசம்பர் 31 வரையில் வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளதாகவும், இதற்கு அனைத்து மாநில நிதியமைச்சர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
முக்கியமான மருந்துகள்
குறிப்பாக Itolizumab, Posaconazole, Infliximab, Bamlanivimab & Etesevimab, Casirivimab & Imdevimab, 2-Deoxy-D-Glucose மற்றும் Favipiravir ஆகிய மருந்துக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்ட வரி டிசம்பர் 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் Amphotericin B (5 சதவீதத்தில் இருந்து 0%), Tocilizumab (5 சதவீதத்தில் இருந்து 0%), Remdesivir (12 சதவீதத்தில் இருந்து 5%) மற்றும் Heparin (12 சதவீதத்தில் இருந்து 5%).
ஆதார் அங்கீகாரம்
இதேபோல் நிறுவனங்களுக்கான ஆதார் அங்கீகாரத்திற்கு அனைத்தும் மாநில நிதியமைச்சர்களும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சிக்கிம் மாநிலம் கோரிக்கை வைத்த 1 சதவீத செஸ் வரி-க்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முழுமையான விபரங்கள் மாலை வெளியாகும்.