இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை அதிகளவில் உற்பத்தி செய்து இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தைக்கும் ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாகத் திகழும் பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் மற்றும் FIH லிமிடெட் நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனமான பாரத் FIH இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டு உள்ளது.
ஆனால் பாரத் FIH நிறுவனத்தின் ஐபிஓ திட்டத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் - FIH மொபைல்
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான சியோமி-யின் முக்கிய உற்பத்தி கூட்டாளியான பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியச் சப்ளையர் ஆக விளங்கும் FIH மொபைல் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் பாரத் FIH நிறுவனம்.
பாரத் FIH நிறுவனம்
பாரத் FIH நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் (தமிழ்நாடு) மற்றும் ஸ்ரீ சிட்டி (ஆந்திரப் பிரதேசம்) பகுதியில் மாபெரும் தொழிற்சாலையைக் கொண்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 25,000 பேர் பணியாற்றி வரும் நிலையில் இதில் 85 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு இலக்கு
இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக இப்பிரிவு நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் அதிகப்படியான சலுகைகளை வழங்கி வருகிறது.
5000 கோடி ரூபாய் ஐபிஓ
இந்திய சந்தைக்காக மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பாரத் FIH நிறுவனம் தற்போது 5000 கோடி ரூபாய் அளவிற்கான ஐபிஓ-வை இந்திய சந்தையில் வெளியிட செபியிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளது. இந்த ஐபிஓ-வில் FIC வாயிலாக 2500 கோடி ரூபாயும், OFS வாயிலாக 2500 கோடி ரூபாய் முதலீட்டையும் திரட்ட உள்ளது.
பிரதமர் மோடி அரசு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய-சீன எல்லை பிரச்சனையின் போது சீன செயலிகளைத் தடை செய்தது போல் சீனா நிறுவனங்களின் முதலீட்டுக்குத் தடை விதித்தது. இதனால் பல முதலீடுகள், பல சீன நிறுவனங்கள் இந்திய சந்தைக்குள் வர முடியாமல் இதுநாள் வரையில் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஹாங்காங் பங்குச்சந்தை
பாரத் FIH நிறுவனத்தின் தாய் நிறுவனமான FIH லிமிடெட் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுச் சீனா-வை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் பாரத் FIH மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசு 8 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கச் சந்தையில் முதலீட்டை ஈர்க்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிளை நிறுவனம்
ஆனால் இந்திய கிளை நிறுவனத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த ஐபிஓ-வில் முதலீடு திரட்டப்பட்டும் காரணத்தாலும், திரட்டப்படும் முதலீடு இந்திய உற்பத்தி தளத்தை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் பயன்படுத்த உள்ளதாகத் தனது பாரத் FIH நிறுவனம் செபி-க்கு கொடுத்த DRHP அறிக்கையில் தெரிவித்துள்ளதால் ஐபிஓ-விற்கு எவ்விதமான தடையும் இருக்காது என நம்பப்படுகிறது.
ஹாங்காங் பங்குச்சந்தை
இந்தியாவில் ஐபிஓ வெளியிட பாரத் FIH நிறுவனம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள நிலையில் ஹாங்காங் பங்குச்சந்தையில் இருக்கும் இதன் தாய் நிறுவனமான FIH லிமிடெட் பங்குகள் 6.7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.