படித்து முடித்தவுடன் வெளிநாடு சென்றால் லட்சத்திலும் கோடியிலும் சம்பாதிக்கலாம் என்ற கனவு பல இளைஞர்கள் மத்தியில் உள்ளது.
அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை நிமித்தம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
வெளிநாடு சென்றவர்கள் எண்ணிக்கை
2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022ஆம் ஆண்டு ஜூலை வரை 28 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 2.5 ஆண்டுகளில் 28 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
எமிக்ரேஷன் செக் ரிவைர்டு
இந்த 2.5 வருடத்தில் குறைந்தபட்சம் 4.16 லட்சம் இந்தியர்கள் எமிக்ரேஷன் செக் ரிவைர்டு (ECR) நாடுகளில் தனியார் நிறுவனங்களின் வேலைகளுக்காக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தனியார் ஊடகம் ஒன்றின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆண்டுவாரியாக எண்ணிக்கை
2020 ஆம் ஆண்டில், சுமார் 7.15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். ஆனால் 2021ஆம் ஆண்டில் இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடு செல்லும் எண்ணிக்கை 8.33 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, ஜூலை இறுதி வரை, 13.02 லட்சம் இந்தியர்கள் வேலை நிமித்தமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சென்றவர்களை விட கடந்த 7 மாதங்களில் சுமார் இரு மடங்கு வெளிநாடு சென்றுள்ளனர்.
உத்தரபிரதேசம் தான் டாப்
கடந்த 2.5 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வேலைக்காக வெளிநாடு சென்றவர்களில் 32 சதவீதம் பேர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தை அடுத்து பீகார் மாநிலத்தில் இருந்து அதிகளவில் வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
எந்தெந்த நாடுகள்
வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல்லும் இந்தியர்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஈராக், இந்தோனேசியா, சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான், லிபியா, லெபனான், மலேசியா, ஓமன், கத்தார், சூடான், சிரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 17 நாடுகளுக்கு அதிகம் சென்றுள்ளனர்.
பணப்புழக்கம்
வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு, குடும்பத்தினர்களுக்கு அனுப்பி வருவதால் இந்தியாவின் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.