நாட்டில் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காகவும் சில ஓய்வூதிய திட்டங்களையும், சேமிப்பு திட்டங்களையும் மத்திய அரசு வழங்கி வருகின்றது.
இன்றைய காலகட்டத்தில் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய கவலையே, தங்களது ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்பது தான்.
ஆனால் அப்படியானவர்களுக்கும் சேர்த்து தான் அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இப்படி பல அம்சங்களையும் சேர்த்து வழங்கும் ஒரு திட்டம் இது தான், அதுவும் அரசின் திட்டம் என்றால், வேண்டாம் என்று சொல்ல முடியுமா? நிச்சயம் இல்லை. சரி அப்படி இந்த திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளது. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் தொடக்கம் எப்போது?
கடந்த 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
யாரெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்
அரசின் இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் மூலம், வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதோடு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது.
வயது என்ன இருக்க வேண்டும்?
18 வயது முதல் 60 வரையிலானவர்கள் யார் வேண்டுமானலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில், வாடிக்கையாளர் கேஒய்சி விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் அரசின் இந்த தேசிய சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.
என்ன ஆவணங்கள் தேவை?
பொதுவாக எந்தவொரு சேமிப்பு திட்டங்களிலும் இணைய தேவைப்படும் ஆவணங்கள் தான் இந்த திட்டத்திலும் தேவை. குறிப்பாக முகவரிச் சான்று, அடையாளச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சரியான ஆவணம் உளளிட்டவை தேவைப்படும். இந்த ஆவணங்களை முன்னிலை முனையம் என்று அழைக்கப்படும் POPs கொடுத்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் எப்படி இணைவது?
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. இது குறித்தான முழு விவரங்களை அறிய முதலீட்டாளர்கள் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையத்தின் மூலம் அரசின் இன்னொரு திட்டமான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
POPs எங்கு உள்ளது?
வங்கிகள், நிதி நிறுவனங்கள் தான் POPs ஆக செயல்படுகின்றன. ஆனால் எந்தெந்த வங்கிகள் POPs ஆக செயல்படுகின்றன. இதனை https://www.npscra.nsdl.co.in/pop-sp.php என்ற லிங்கினை கிளிக் செய்து உள்ளே சென்றால், அங்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்தினை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் எந்த மாநிலத்தினை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். இதன் பின்னர் எந்த மாவட்டத்தினை சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிட்டு கிளிக் செய்தால், உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து POPs-களின் முகவரிகள் வருகின்றன. ஆக அவற்றில் எது உங்களுக்கு ஏற்றதோ? அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்களது பிரான் எண்?
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் ஒவ்வொரு சந்தாதாரருக்கும் 12 இலக்க எண் வழங்கப்படும். அது பிரான் எண் (PRAN) என்று அழைக்கப்படும். அல்லது ஓய்வூதிய கணக்கு எண் என்று அழைக்கப்படும். இந்த ஓய்வூதிய கணக்கு எண், ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
TIER-1 - குறைந்தபட்சம் எவ்வளவு?
அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும். இந்த கணக்கில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செலுத்தாவிடில் இந்த கணக்கு முடக்கப்படும்.
TIER-2 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?
இந்த இரண்டாவது ஒய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும். இந்த கணக்கில் நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
வேறு பகுதிகளுக்கு மாற்றிக் கொள்ள முடியுமா?
அரசின் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தினை இந்தியாவின் எந்தவொரு பகுதியில் இருந்தும் இயக்கிக் கொள்ள முடியும், ஆரம்பத்தில் தனியார் வங்கியில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்கினீர்கள் என்றால், பின்னர் பொதுத்துறை வங்கிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போல மாநிலத் துறையில் இருந்து, மத்திய அரசு துறைக்கு மாறினாலும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
சேவை வழக்குனர்கள் யார்?
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணையும் சந்தாதாரர்களின் பங்களிப்பு நிதியை மேலாண்மை செய்யும் சேவை வழங்குனர்களாக, தற்போதைக்கு கீழ்கண்ட நிறுவனங்கள் உள்ளன.
Life Insurance Corporation of India
SBI Life Insurance
ICICI Prudential Life Insurance
Bajaj Allianz Life Insurance
Star Union Dai-ichi Life Insurance
Reliance Life Insurance
HDFC Standard Life Insurance
NPS பற்றிய புகார்கள் - ஆஃப்லைன் பயன்முறை
NPS வாடிக்கையாளர்கள் எழுத்துப்பூர்வ புகாரை POPs-க்கு அனுப்பலாம். POPs அந்த புகாரை மத்திய பதிவு வைத்தல் முகமை (சிஆர்ஏ) மற்றும் மத்திய குறை தீர்க்கும் முறைமைக்கு (சிஜிஎம்எஸ்) அனுப்பும். புகார் பதிவு செய்யப்பட்டால் டோக்கன் எண் வழங்கப்படும். மேலும் அந்த எண் POPs அனுப்பப்படும். இதன் மூலம் புகார் அளித்தவர் டோக்கன் எண்ணை POPs பெறலாம்.
NPS பற்றிய புகார்கள் - ஆன்லைன் பயன்முறை
NPS வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும் தங்களது புகார் மேலாண்மை அமைப்பில் (சிஜிஎம்எஸ்) ஆன்லைன் புகாரை பதிவு செய்யலாம். புகார் அளிப்பதற்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) விவரங்களை நிரப்ப வேண்டும். PRAN விவரங்கள் நிரப்பப்படாவிட்டால், பிஓபி பதிவு விவரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்காக https://www.npscra.nsdl.co.in/ என்ற தளத்திற்கு சென்று, அங்கு subscriber's corner என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் log grievance / inquiry என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் என்பிஸ் சந்தாதாரர் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பின்னர், அது ஒரு புதிய பக்கத்திற்கு செல்லும். அதில் தொடரவும் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு உங்களது நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) விவரங்கள் மற்றும் POP விவரங்களை வழங்க வேண்டும். அதன் பிறகு உங்களது புகார்களை பதிவு செய்யலாம். உங்களது புகாரை தீர்க்கும் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் தேவையான துணை ஆவணங்களை ஆன்லைன் முறை வழியாக பதிவேற்ற வேண்டும். புகாரை வெற்றிகரமாக சமர்ப்பித்த பின், ஒரு டோக்கன் எண் திரையில் காண்பிக்கப்படும். இந்த எண்ணை புகார்தாரர் மேலும் குறிப்பிடுவதற்கும் எதிர்காலத்தில் புகாரைக் கண்காணிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கால் சென்டர் மூலம் எப்படி புகார் அளிக்கலாம்?
1800222080 என்ற கட்டணமில்லா எண்ணை பயன்படுத்தி சி.ஆர்.ஏ கால் சென்டரை அழைப்பதன் மூலம் புகார் அளிக்க முடியும். சந்தாதாரர் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு NPS கணக்கைத் திறக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட T-PIN ஐக் கூறி அவரது அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும். புகாரை வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு, டோக்கன் எண் வழங்கப்படும்.